இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் அவர் தலைமையில் இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று நடந்தது. இதில் இளையராஜாவுடன் பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இளையராஜா உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
சமீபத்தில் அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு இளையராஜா பாராட்டி எழுதியது விவாதப் பொருளானது. இந்த இசை மேடையில் இளையராஜா முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினார்.
இளையராஜா பேசும்போது, "எங்க அப்பா ஜாதகம் பார்த்து, எனக்கு முதல்ல வெச்ச பேரு ஞானதேசிகன். ஸ்கூல்ல எல்லாரும் எளிமையா கூப்பிடணும்னு ராஜய்யானு மாத்திட்டாங்க. என்னோட மியூசிக் மாஸ்டர் எனக்கு முதல் பாட்டு சொல்லிக் கொடுக்கறப்ப, நோட்ல பேர் எழுதறதுக்காக என்கிட்ட, 'உன் பேர் என்ன'னு கேட்டாரு. நான், 'ராஜய்யா'னு சொன்னேன். அவர், 'அது நல்லால... ராஜா'னு மாத்திக்க சொன்னார். அப்பறம் கொஞ்ச நாள் ராஜா... ராஜானு போச்சு. படம் வாய்ப்பு வந்தப்ப பஞ்சு அருணாசலம், 'யார் பேர்யா போடறது'னு கேட்டார். 'பாவலர் பிரதர்ஸ் பேர்ல நிறைய கச்சேரி பண்ணிட்டு இருக்கோம். அதையவே போடலாம்'னு சொன்னேன். அதுக்கு அவர், 'அது பழைய பேர்யா... அது வேண்டாம்' என்றார். 'அப்ப ராஜான்னே போட்டுருங்க'னு சொன்னேன். அவர், 'ஏற்கெனவே ஏ.எம்.ராஜா இருக்கார்யா. சரி... அவர் மூத்தவர்... நீ இளையராஜா' என்றார். அவ்வளவுதான்.
என் பேர் நானே வெச்சது இல்ல. சிவன் தனக்கே சிவன்னு பேர் வெச்சுக்கிட்டானா? நம்மதான் அவரை சிவன்னு கூப்பிடறோம். ஆனா, எங்க அப்பா வெச்ச ஞானதேசிகன்னு பேர்ல இருந்து, ஞானத்தை மட்டும் எடுத்து... இசையோடு சேர்த்து கலைஞர் ஐயா இதே மாதிரி மக்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்துல எனக்கு 'இசைஞானி' பட்டத்தை அறிவிச்சார். அவரை எப்படி எடுத்துக்குறது? என் தந்தை வைத்த பெயர் இவருக்கு எப்படித் தெரிஞ்சுது? அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்வதுதான் தலைவருடைய சிறப்பு. அவர் வழியிலேயே தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் நாட்டை நடத்திக் கொண்டு செல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இந்த நாட்டுக்கு செய்வதை எல்லாம், எனக்கு செய்வதாக நான் எடுத்துக் கொள்கிறேன்.
எனக்கென்று நான் யாரிடமும் எதுவும் கேட்க மாட்டேன். யாரிடமும் எதற்கும் போனதில்லை. கலைஞர் ஐயாவிடம் எனக்கு அவ்வளவு மரியாதை. அவர் என் தந்தைக்கு சமமானவர். எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தார் என்பதற்காக அல்ல. தனிப்பட்ட ரீதியாக, தமிழக மக்களை முன்னேற்ற அவர்பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு நன்றாகத் தெரியும். பொதுவாழ்வில் அவர் செய்த நல்ல காரியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் வழியே செல்லும் நம் முதல்வரும், அவருடைய கனவை நிறைவேற்றுவார் என நாம் முழு மனதோடு நம்புவோம்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2cR5enT
via
