திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் பொதுக்கணக்கு நேர்முக உதவியாளராக பணியாற்றிவந்தவர் மோகனகுமரன், வயது 53. சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் பணிமாறுதலில் திருப்பத்தூருக்கு வந்தார். திருப்பத்தூர் பிரான்லைன் பகுதியிலிருக்கும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரேணு என்பவரின் வீட்டு மாடி அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். உடன் யாரும் வசிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, அறைக்குத் திரும்பியிருக்கிறார்.
நேற்றைய தினம் அவர் பணிக்கு வரவில்லை. விடுமுறைக் குறித்த தகவலையும் தெரியப்படுத்தவில்லை என்பதால், சக அலுவலர்கள் அவருக்குப் போன் செய்திருக்கிறார்கள். பலமுறை போன் செய்தும், அவர் எடுத்து பேசவில்லை. ‘ரிங்’ மட்டுமே அடித்துக்கொண்டிருந்தது. மாலை வரையிலும் இதே நிலைதான் நீடித்தது. இதையடுத்து, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிலர், மோகனகுமரன் தங்கியிருந்த வீட்டுக்கு நேரிலேயே வந்து, கதவை தட்டியிருக்கிறார்கள்.
கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள், திருப்பத்தூர் நகர போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துச்சென்ற போலீஸார், கதவை உடைத்து பார்த்தபோது கட்டிலில் மோகனகுமரன் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்ததும், கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டனர்.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக மோகனகுமரனின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு பணிமுடித்து வீடுத் திரும்பிய மோகனகுமரன் குளிப்பதற்காக ஹீட்டர் போட்டுவிட்டு, உடைகளை களைத்திருக்கலாம். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர் மரணத்துக்கான காரணத்தை உறுதியாகச் சொல்லமுடியும் என்கிறார்கள் போலீஸார். இறந்துபோன மோகனகுமரனுக்கு மனைவியும், 12 வயதில் மகனும் இருக்கிறார்கள்!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/N40FMSI
via
