"தமிழ் சினிமாவில் குரூப்பிசம், கேங்கிசம் இல்லை!"- `தலைவி' டிரெய்லர் விழாவில் கங்கனா ரணாவத்!

0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் இயக்கியிருக்கிறார், இயக்குநர் விஜய். ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, ஆர்.எம். வீரப்பனாக சமுத்திரக்கனி, ஜானகியாக மதுபாலா, சசிகலாவாக பூர்ணா என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. 'பாகுபலி' படத்தின் கதையாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான விஜேந்திர பிரசாத் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார். அவரோடு இணைந்து மதன் கார்க்கி வசனம் எழுதியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசை, ஆண்டனி எடிட்டிங் என டெக்னிக்கலாகவும் படம் பவர்ஃபுல் கலைஞர்களால் நிரம்பியிருக்கிறது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி 'தலைவி' வெளியாகயிருக்கும் நிலையில், இன்று சென்னையில் இந்தப் படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. படத்தில் பணியாற்றிய பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கங்கனா ரணாவத்

"ஒருநாள் கங்கனா என்கிட்ட, 'எனக்கு ஜெயலலிதா மேடம் பத்தி அவ்வளவா தெரியாது. அவங்களா நடிக்கணும்னா நான் எந்த மாதிரி தயாராகணும்'னு கேட்டாங்க. 'நடிக்கத் தேவையில்லை. நீங்க நீங்களா இருந்தாலே போதும். யாரோடும் சமரசம் செஞ்சுக்காமல் உங்க வழியில பயணிக்கிறீங்க. சுயமரியாதையோட இருக்கீங்க. அதுதான் ஜெயலலிதா. அதனால, மக்கள் உங்களை தவிர்க்கமாட்டாங்க'னு சொன்னேன். 'மணிகர்ணிகா' படத்துல இருந்து கங்கனாவுடன் பயணிக்கிறேன். என் பொண்ணு பெயரும் மணிகர்ணிகாதான். இந்தப் படத்தின் பெயர் 'தலைவி'. கங்கனா, உங்களுடைய நிஜ வாழ்க்கையிலயும் நீங்க ஒரு நல்ல தலைவியா வருவீங்கன்னு வாழ்த்துறேன்" என்றார் விஜேந்திர பிரசாத்.

அடுத்ததாக பேசிய கங்கனா ரணாவத், "இன்னிக்கு என் பிறந்தநாள். 34 வயசாகுது. என்னை இந்த உலகத்துக்கு கூட்டிக்கிட்டு வந்ததுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். விஜேந்திர பிரசாத் சார் என்னை பரிந்துரைக்கலைனா இப்படியான அருமையான படத்துல நான் இருந்திருக்கமாட்டேன். வழக்கமா, என்னை படத்துல இருந்து வெளியே அனுப்பதான் பரிந்துரை செய்வாங்க. முதல்முறையா என்னை பரிந்துரை செஞ்சு படத்துக்குள்ள கூட்டிட்டு வந்ததுக்காக விஜேந்திர பிரசாத் சாருக்கு நன்றி. தமிழ்நாட்டுல இருந்த அரசியல் எனக்கு தெரியாது. ரொம்ப பயந்தேன். அதனால, விஜேந்திர பிரசாத் என்கிட்ட சொல்லும்போது, நான் வேண்டாம்னுதான் சொன்னேன். காரணம், ஒரு படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு சரியா இல்லைனா, அந்தப் படம் ஜெயிக்காது. ஆனா, அவர் ரொம்ப நம்பிக்கையா இருந்தார். எனக்கும் நம்பிக்கை கொடுத்தார். அப்படித்தான் நான் படத்துக்குள்ள வந்தேன். எத்தனை பெரிய ஹீரோக்கள் ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் கதையில நடிக்க ஓகே சொல்லுவாங்கன்னு தெரியலை. ஆனா, அரவிந்த்சாமி சார் அவ்ளோ சப்போர்டிவா இருந்தார். இனி வரும் காலங்கள்ல பெரிய ஹீரோக்கள் நிச்சயம் ஹீரோயின் சார்ந்த கதைகளுக்கு உறுதுணையா இருப்பாங்கன்னு நம்புறேன். குறிப்பா, இந்தி சினிமாவிலும்.

அரவிந்த்சாமி - கங்கனா ரணாவத் - விஜேந்திர பிரசாத்

தம்பி ராமையா சார் செட்ல இருந்தா அவ்ளோ எனர்ஜியா இருக்கும். தென்னிந்திய சினிமா இண்டஸ்ட்ரியில நான் பார்த்தவரை நெப்போடிஸம் அப்படிங்கிறது இருக்கலாம். ஆனா, குரூப்பிசமோ, கேங்கிசமோ இல்லை. வெளியே இருந்து சினிமாவுக்குள்ள வர்றவங்களை வெளியே தள்ளுறதில்லை. அவங்களுக்கு ஆதரவு கொடுக்கிறாங்க. அவங்க மேல வெச்சிருக்கிற அன்பும் ஊக்கமும் எனக்கு இங்கேயே இருக்கணும்னு தோண வைக்குது. இனி தொடர்ந்து தமிழ்ல நிறைய படங்கள் பண்ணுவேன். கனி சார் செட்ல எப்போவும் அந்த கேரக்டராவே இருப்பார். அது என்னை பயமுறுத்தும். பிரமாதமான இசையை கொடுத்த ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி. கடைசியா, என் இயக்குநர் விஜய் சார். எப்போவும் அவர் முகத்துல சிரிப்பு இருந்துக்கிட்டே இருக்கும். பொதுவா, ஷூட்டிங் முடிஞ்சதும் டீமோட உட்கார்ந்து ஜாலியா பேசிட்டு இருப்பாங்க. ஆனா, விஜய் சார் அவர் வேலையில ரொம்ப கவனமா இருப்பார். அவர்கூட பழக பழக அவர் குணம் என்னனு தெரிஞ்சது. இவர் ஒருத்தர்தான் என் திறமை மீது நல்ல அபிப்ராயம் வெச்சார். நடிகர்களை எப்படி கையாளணும்னு இவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்" என்று கண்கலங்கியபடி பேசினார்.

Also Read: "என் தம்பி பாலாவின் வாழ்க்கைக்கும், `கண்ணான கண்ணே' பாடலுக்கும் சம்பந்தம் இல்லை!"- `விஸ்வாசம்' சிவா

தலைவி

இயக்குநர் விஜய் பேசுகையில், "'ஜெயலலிதா மேடம் பத்தின பயோபிக் பண்ணப்போறோம். நீங்க இயக்குறீங்களா?'னு தயாரிப்பு தரப்புல இருந்து பேசினாங்க. பெரிய கடல். நாம என்ன பண்ணப்போறோம்னு யோசிச்சேன். விஜேந்திர பிரசாத் படத்துக்குள்ள வந்தது ரொம்ப மகிழ்ச்சி. அவர்கிட்ட பேசும்போது ஸ்கூலுக்கு போன மாதிரி இருக்கு. அவ்ளோ கத்துக்கலாம். அரவிந்த்சாமி சாருடைய பங்கு ரொம்ப ரொம்ப மகத்தானது. முதல்ல அவரை அப்ரோச் பண்ணும்போது நோ சொன்னவர், அப்புறம் ஓகே சொல்லிட்டார். அவ்ளோ மெனக்கெட்டிருக்கார். ஜி.வி.பிரகாஷ் என் கரியர்ல மட்டுமல்ல வாழ்க்கையிலயும் முக்கியமானவர். அஜயன் பாலா சார், மதன் கார்க்கி ரெண்டு பேரும் ஆரம்பத்துல இருந்து அவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்காங்க. கனி சாரும் தம்பி ராமையா சாரும் அவங்க கதாபாத்திரங்கள்ல பின்னியிருக்காங்க. நான்கு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்காங்க கங்கனா. சினிமா பத்தியும் திரைக்கதை பத்தியும் அவங்களுக்கு இருக்கிற அறிவு அபாரமானது. எமோஷனை ரொம்ப அழகா கடத்தியிருக்காங்க. இந்தப் படத்தை அரசியல் ரீதியா பார்க்கலை. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சூழல்ல ஒரு பெண் எப்படி வளர்ந்து பெரிய ஐகானா மாறினாங்க அப்படிங்கிறதைத்தான் பார்த்தோம்" என்றார்.



from தமிழ் சினிமா https://ift.tt/3rmCQ7T
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*