'' 'விஸ்வாசம்' படத்துக்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இது எதிர்பாரததுனு சொல்ல மாட்டேன். எதிர்பார்த்துட்டுதான் இருந்தேன். இமானுக்கு கிடைக்கணும்னு ஆசையா இருந்தது. இமானால தமிழ் சினிமாவுக்கே பெருமை. மெலடி பாட்டுக்காக பெரிய பேர் வாங்குனவர் இமான் சார். 'கண்ணனா கண்ணே' பாட்டு செம ஹிட்டாச்சு. இவர் கம்போஸ் பண்ணியிருக்குற விதமே செமையா இருக்கும். இது மட்டுமில்லாம படத்துல இருந்த எல்லா ஜானர் பாட்டுமே செம ஹிட்டுதான்.
என்னோட வாழ்த்துகள் எப்பவும் இமானுக்கு இருக்கும்'' என்ற சிவாவிடம் ''உங்கள் தம்பி பாலாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து 'விஸ்வாசம்' படம் உருவாகியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறதே தெரியுமா?'' எனக் கேட்டேன்.
சிவாவின் தம்பி பாலா 'அன்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். சமூகவலைதளங்களில் சிவா, தன் தம்பி பாலாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டே 'விஸ்வாசம்' படத்தை இயக்கியிருப்பதாகவும், 'கண்ணான கண்ணே பாடல்' அவருக்கான ட்ரிபியூட் எனவும் செய்திகள் பரவுகின்றன. ''தமிழில் அறிமுகமான பாலாவுக்கு மலையாளத்தில் சில வாய்ப்புக்கள் கிடைத்தன. 'Big B' என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டன்ட் கலைஞராக நடித்தார் பாலா. ஒரே படத்தில் கேரள மக்களின் இதய நாயகனானார். 'புலிமுருகன்' படத்தில் வில்லன் வரை நிறைய படங்களில் நடித்தார். கேரள டிவி சேனலில் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவரை காதலித்து திருமணம் செய்த பாலாவுக்கு ஒரு மகள் பிறந்தாள். ஆனால், காலப்போக்கில் தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் எழுந்து இருவரும் பிரிந்துவிட்டனர். இதைத்தான் சிவா படமாக எடுத்திருக்கிறார்'' என சமூகவலைத்தள செய்தி நீள்கிறது. இது குறித்துதான் இயக்குநர் 'சிவா'விடம் கேட்டேன்.
''இந்த நேரத்துல 'விஸ்வாசம்' இசை குறித்து மட்டுமே பேச விரும்புறேன். சோஷியல் மீடியா எதுலயும் நானில்லை. அதனால அங்க என்ன எழுதியிருக்காங்கன்னு எனக்குத் தெரியல. கதைக்கும், என் தம்பி பாலாவின் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
'கண்ணான கண்ணே' பாடலுக்காக அஜித் சாரும் வாழ்த்துகள் சொன்னார். அவரும் செம ஹேப்பியா இருக்கார்'' என்றார்.
from தமிழ் சினிமா https://ift.tt/3sr9kiF
via
