கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்... பிளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

0

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹெச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடம் பிடித்தார். இந்தநிலையில் ஹெச்.வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன்!

பொன்னார் கடந்துவந்த பாதை:

1951 மார்ச் 1-ம் தேதி பிறந்த பொன்.ராதாகிருஷ்ணன் சட்டப்படிப்பை முடித்த கையோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். பின்னர் இந்து முன்னணி நிறுவன தலைவராக இருந்த ராமகோபாலனுக்கு உதவியாக உடன் இருந்தார். 1993-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரக்காக (முழுநேர ஊழியர்) ஆனார். இதனால் திருமணம் செய்துகொள்ளாமல் முழுநேரமாக இயக்கப் பணியில் இணைந்தார். 1993-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவராக ஆன பொன்.ராதாகிருஷ்ணனின் கண்ணசைவில்தான் இன்றுவரை குமரி பா.ஜ.க இயங்குகிறது. பா.ஜ.க மாநில தலைவராக இரண்டுமுறை இருந்திருக்கிறார்.

1991-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். இன்றைய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அன்று அப்போது நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி என இருந்தது. இதுவரை எட்டு முறை நாடாளுமன்ற தேர்தலிலும், ஒருமுறை 2011-ல் நாகர்கோவில் சட்டசபை தேர்தலில் போட்டியிடிருக்கிறார். 1999 மற்றும் 2014 ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்திய அமைச்சர் ஆனார். இதுவரை 9 தேர்தல்களில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 10-வது முறையாக இம்முறையும் களம் காணுகிறார்.

மார்த்தாண்டம் மேம்பாலம்

களத்தில் பிளஸ் - மைனஸ்:

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தீர்மானிப்பது மதம் என்றே சொல்லலாம். இங்கு சிறுபான்மையினர் கிட்டத்தட்ட பெரும்பான்மையினருக்கு இணையாக உள்ளனர். சிறுபான்மையினர் வாக்கு பெரும்பாலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் செல்லும். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்ற சமயங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள சிறுபான்மையினரும் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மீனவர்கள் வாக்கும் பொன்னாருக்கு கிடைத்திருக்கிறது.

2014 முதல் 2019-வரை மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள், சுசீந்திரம் பழையாற்றில் புதிய பாலம், கன்னியாகுமரிக்குச் செல்ல சுசீந்திரத்தில் இருந்து தனியாக இணைப்புச்சாலை, அனைத்து ரோடுகளும் செப்பனிட்டது என வளர்ச்சிகளை குவித்திருந்தார். அதுபோல நான்குவழிச்சாலை பணிகள், இரட்டை ரயில் பாதை பணிகளை முடுக்கிவிட்டார். ஆனால், முதலில் இனயம் பகுதியிலும், பின்னர் கன்னியாகுமரியிலும் வர்த்தக துறைமுகம் கொண்டுவருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது, கடலோர பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் கட்சியினரிடையேயும் சின்ன சின்ன அதிருப்திகள் இருந்தன. இதுதான் கடந்தமுறை பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைய காரணம் ஆகிவிட்டது.

கோயில் கும்பாபிஷேக விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன்

அதே சமயம் 2019-ல் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு வெளிநாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் உதவியிருக்கிறார். அதுமட்டுமல்லாது வர்த்தக துறைமுகம் பற்றி பேசுவதையே பா.ஜ.க-வினர் விட்டுவிட்டனர். அதிலும் பொன்னார் கடந்த தேர்தலில் தோற்றதால் வருத்தப்பட்ட பா.ஜ.க கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளில் அமைப்பை பலப்படுத்தியுள்ளனர். நாளை அமித் ஷா குமரி வரும் நிலையில், மாவட்டத்தில் தொண்டர்கள் எழுச்சி மேலும் அதிகரித்துள்ளது.

என்றாலும், பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடப்போவது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் என்றால், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2O6eP7i
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*