இந்தத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. எந்தக் கட்சி அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறது என்பதுதான் முந்தைய தேர்தல்களில் பெரியளவில் பேசுபொருளாகும். ஆனால், இம்முறை அப்படி அல்ல. எந்தக் கட்சியின் பாடல் அதிகளவில் கேட்கப்பட்டுள்ளது, எந்த வேட்பாளருடைய ட்வீட் அதிகளவில் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது, எந்த வேட்பாளர் வைரலானார் என சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட விவாதங்களைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில், `எந்த வேட்பாளருடைய வேட்பு மனு அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது?' என்பது சமீபத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரமாணப் பத்திரத்தை 6,879 பேரும், மு.க.ஸ்டாலினின் பிரமாணப் பத்திரத்தை 4,351 பேரும், கமல்ஹாசனின் பிரமாணப் பத்திரத்தை 15,563 பேரும் சீமானின் பிராமணப் பத்திரத்தை 10,261 பேரும் டி.டி.வி.தினகரனின் பிரமாணப் பத்திரத்தை 2,218 பேரும் தரவிறக்கம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் பத்மப்ரியாவின் பிரமாணப் பத்திரத்தை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தரவிறக்கம் செய்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
மத்திய அரசின் `சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' வரைவு அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டதன் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான சமூகவலைதளங்களில் `சென்னை தமிழச்சி' என்கிற பெயரில் இயங்கிவந்த பத்மப்ரியாதான் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர். சமீபத்தில் இட ஒதுக்கீடு குறித்து இவர் பேசிய பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில், தனது வேட்பு மனு அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட காரணத்தால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளார் பத்மப்ரியா.
Also Read: ``முதலைகளோடு மோதும் தங்க மீன் நான்!” - மதுரவாயல் ம.நீ.ம வேட்பாளர் பத்மப்ரியா
தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் பத்மப்ரியாவிடம் இதுகுறித்துப் பேசினோம், ``மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். எங்கு போனாலும் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். ஆனால், எனது பிரமாணப் பத்திரத்தை இத்தனை லட்சம் பேர் தரவிறக்கம் செய்வார்கள் என்பது நானே எதிர்பாராதது. எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. எதற்காக என்னுடைய பிரமாணப் பத்திரத்தைத் தேடி தரவிறக்கம் செய்தார்கள் எனத் தெரியவில்லை. சாதாரண நிலையிலிருந்து எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாமல் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். ஆகையால் என்னைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தரவிறக்கம் செய்திருக்கலாம். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் வெல்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/39DuGSl
via
