கேரள முதல்வராக பினராயி விஜயனுடன் 21 அமைச்சர்களும் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று மாலை 3.30 மணியளவில் நடக்க உள்ளது. இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் பினராயி விஜயன். அவரது அமைச்சரவையில் மற்ற அனைவருமே புதுமுகங்கள்தான். கொரோனா காலகட்டம் என்பதால் 500 பேர் கலந்துகொள்ளும் வகையில் பதவி ஏற்புவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக பதவி ஏற்புவிழா நடைபெற உள்ளது.
கேரள அமைச்சர்கள் பட்டியலில் இருப்பவர்களில் இருவர் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் கே.கே.சைலஜாவுக்கு பதிலாக சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வீணா ஜார்ஜ். 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணிபுரிந்த வீணா ஜார்ஜ் ஆறன்முளா சட்டசபை தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றவர். இப்போது சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
அடுத்ததாக அதிக விமர்சனத்துக்குள்ளாக்கி பேசப்படுபவர் பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ். கேரள முதல்வர் பினராயி விஜயனின் மருமகன். மருமகனுக்கு சீதனமாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பறக்கின்றன. அதிலும் முக்கியத்துறைகளான பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறைகள் வழங்கப்பட்டுள்ளது விமர்சனத்தை அதிகரித்துள்ளது. பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கும் 44 வயதான முகம்மது ரியாசுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருவனந்தபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்பதால் மிக எளிமையாக திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான அப்துல் காதரின் மகன் முகம்மது ரியாஸ். பேப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்வு ஆனவர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போதுதான் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.
இவர் பள்ளியில் படிக்கும்போதே சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யில் இணைந்து பணியாற்றியவர். கோழிக்கோடு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். 2017-ல் இருந்து இப்போது வரை ஜனநாயக வாலிபர் சங்க (டி.ஒய்.எஃப்.ஐ) அகில இந்திய தலைவராக பதவி வகித்து வருகிறார். சி.பி.எம் மாநிலக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலிலும், கட்சியிலும் வெவ்வேறு படிநிலைகளைக் கடந்து தான் தற்போது அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யபப்ட்டிருக்கிறார் என்று கேரள சி.பி.எம் கட்சியினர் தெரிவிக்கின்றனர். பினராயி விஜயனின் மருமகன் என்பதற்காக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்கின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oux0kU
via
