கேரளா: சைலஜா டீச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை அமைச்சராக மீண்டும் ஒரு பெண்? யார் இந்த வீணா ஜார்ஜ்?

0

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரளத்தின் புதிய அமைச்சரவை நாளை பொறுப்பேற்க உள்ளது. இதற்காக 500 பேர் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகளுடன் விழா பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. 21 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், யார் யாருக்கு என்ன துறை என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. துறைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்வார் என எல்.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர்களின் துறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உளவுத்துறை மற்றும் விஜிலென்ஸ் துறைகளை முதல்வர் பினராயி விஜயன் தன்வசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பினராயி விஜயனின் மருமகன் முகம்மது ரியாசுக்கு பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை. நிதி அமைச்சராக கே.என்.பாலகோபாலன் நியமிக்கப்பட உள்ளதாகவும், உயர்கல்வித்துறை அமைச்சராக பிந்து நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கே.கே.சைலஜா

கே.கே.சைலஜா டீச்சர் வகித்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் பதவி மீண்டும் மகளிருக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன் பத்திரிகையாளராக இருந்த வீணா ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வீணா ஜார்ஜ் 15 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றியவர். 2016-ல் ஆறன்முளா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.

எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதே 2019 நாடாளுமன்ற தேர்தலில் சி.பி.எம் சார்பில் பத்தணம்திட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது இரண்டாவது முறையாக ஆறான்முளா தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றுள்ளார். வீணா ஜார்ஜ் ஆறன்முளா தொகுதியில் 19,003 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் ஜார்ஜ் ஜோசப்.

வீணா ஜார்ஜ்

சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்க இருப்பது குறித்து வீணா ஜார்ஜிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``என்ன துறை என்பது குறித்து இன்னும் எனக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடைக்கவில்லை. கட்சி வழங்கும் பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிக்க முயற்சிப்பேன். என்ன துறை என்பது குறித்து கட்சி முடிவு செய்யும்" என்றார். அமைச்சர்களின் துறை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என திருவனந்தபுரம் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2RuuoaC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*