தர்மபுரி இறப்பு விகித சர்ச்சை:'மறைக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை'-செந்தில்குமார் எம்.பி சொல்வதென்ன?

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் உச்சம் தொடும் நிலையில், இறப்பு விகிதம் குறைத்து காட்டப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. தொற்று பரவலும், இறப்பு விகிதமும் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக புள்ளி விவரங்களை வெளியிடும் மாவட்டங்களில் தருமபுரி முன்னிலை வகிக்கிறது. அந்த மாவட்டத்தில், கடந்த 8-ம் தேதி மூன்று பேர், 11-ம் தேதி ஒருவர், 13-ம் தேதி மூன்று பேர் மட்டுமே கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாட்களுக்கு இடைப்பட்ட 9, 10, 12, 14 ஆகிய தேதிகளில் ஓர் உயிரிழப்புக்கூட இல்லை என்றும் புள்ளி விவரங்களில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் அறிக்கை

இங்குதான் அனைவருக்கும் சந்தேகம். தருமபுரி மாவட்டத்திலுள்ள சுடுகாடுகளில் உடல்களை எரிக்க முடியாத நிலை காணப்படுகிறது. கொரோனாவுக்கு இறந்தவர்களின் உடல்களுடன் பலரும் சுடுகாடுகளில் வரிசைக்கட்டி காத்துகிடக்கிறார்கள். கடந்த 12-ம் தேதி பிற்பகலுடன் முடிவடைந்த 36 மணி நேரத்துக்குள்ளாக தருமபுரி அரசு மருத்துவமனையில் மட்டும் ஏழு பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகமே தெரிவித்துள்ளது. அப்படியிருக்க, 11-ம் தேதி மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 12-ம் தேதி எவருமே இறக்கவில்லை என குறிப்பிட்டிருப்பது எப்படி? என்கிற கேள்வி சர்ச்சையாகி வெடித்திருக்கிறது. கொரோனா உயிரிழப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என தருமபுரி மக்களும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘தருமபுரியில் என்ன நடக்கிறது?’ என்பது குறித்து அந்த ஊரின் தி.மு.க எம்.பி-யும் டாக்டருமான செந்தில்குமாரிடம் பேசினோம். ‘‘தருமபுரி மாவட்டத்தில் பத்தாயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படுகின்றன. தற்சமயம், 452 ஆக்ஸிஜன் படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன. என் மாவட்டத்திலுள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தொடர்ந்து ஆய்வு செய்கிறேன். முதற்கட்டமாக, செட்டிக்கரை பொறியியல் கல்லூரியில் 300 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்படியாக படுக்கை எண்ணிக்கைகள் உயர்த்தப்படும். இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று கொடுக்கிறார்கள். தினமும் எவ்வளவுப் பேர் பரிசோதனை செய்து கொள்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் தெரிகிறது.

எம்.பி செந்தில்குமார்

அதனடிப்படையில் பார்த்தால் எவ்வளவோ பேர் இறக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள்கூட உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் மறைக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால், மாவட்ட நிர்வாகம்தான் அந்த தகவல்களை வெளியிடுகிறது. மாவட்ட நிர்வாகமே முழு பொறுப்பாகும். என்னைப் பொறுத்தவரையில், ரெட் அலர்ட் மாவட்டமாக தருமபுரியை அறிவித்து பொது ஊரடங்கை கடுமையாக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். கூடுதல் விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பின் விளைவுகள் ஏற்படும் என்று தவறான தகவல்களை யாரும் சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம்’’ என்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3foilU2
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*