விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தியது சட்டவிரோதம் என்று கூற முடியாது என்று வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்துக்கு ஒரு போக விவசாயத்துக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து போதிய அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி `பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தினர்' கடந்த 2017-ம் ஆண்டு போராட்டம் நடத்தினார்கள்.
மதுரை -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2,000-க்கும் அதிகமான விவசாயிகள் அப்போது போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலூர் காவல்துறையினர் விவசாயிகள் சங்க செயலாளர் முருகன், வழக்கறிஞர்கள் ஸ்டாலின் அமலன் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் அப்போது வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அமலன் வழக்கு தொடர்ந்திருந்தார். நீண்ட விசாரணைக்குப்பின் நீதிபதி இளங்கோவன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் உத்தரவில், ``விவசாயம் செய்வதற்காகத் தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அதன் அடிப்படையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை சட்டவிரோதமானது என்று கூற முடியாது. போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான எந்த ஆதாரங்களும் வழக்கில் காட்டப்படவில்லை.
அதனால், விவசாயத்துக்கு தண்ணீர் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்கிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில், விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கால் மேலூர் வட்டார விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இத்தீர்ப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களுக்கு சோறு போடும் விவசாயிகளின் நியாயமான போராட்டங்களை புரிந்து கொள்ளாமல், அவர்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்காமல் மிரட்டி ஒடுக்கும் வகையில் பொய் வழக்கு பதிவு செய்யும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/34S5gO2
via
