``கிராமப்புற மாணவர்களை விஞ்ஞானிகளாக்கணும்!” - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஜெயசுந்தர்

0

கற்றல் பணியைச் சிறப்பாகவும், உயரிய சிந்தனையுடனும் செயல்படுத்திவரும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகளை மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம் அளித்து வருகிறது. அதனடிப்படையில் 2020-21 கல்வியாண்டுக்காக மத்திய அரசு அறிவித்திருக்கும் நல்லாசிரியர் விருது, 44 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் புதுச்சேரி மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயசுந்தர். ஆசிரியர் ஜெயசுந்தருக்கு வாழ்த்துகள் சொல்லிப் பேசினோம்.

``மத்திய அரசின் இந்த பெருமைமிகு விருதை புதுச்சேரி சார்பாக பெறுவது மிகவும் பெருமையானது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அறிவியல் ஆசிரியர் நான்.

புதுச்சேரி

Also Read: `இதுவும் என் பொறுப்புதான்!' - பள்ளி வளாகத்தை தனியொருவராக தூய்மைப்படுத்திய தலைமை ஆசிரியர்

தற்போது மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 2009-ம் ஆண்டு தற்காலிக ஆசிரியராக புதுச்சேரி கல்வித்துறையில் இணைந்து கரையாம்புத்தூர் அரசுப் பள்ளியில் 5 வருடங்கள் பணியாற்றினேன். நகரத்திலிருந்து தனித்து இருக்கும் கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது அங்குதான். அங்கு தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களை ஆங்கில வழி அறிவியல் பாடத்தில் 100% தேர்ச்சி பெற வைத்தேன்.

அறிவியல் ரீதியான விளக்கங்களையும், தெளிவுகளையும் வகுப்பறைக்கு வெளியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக, பாரிஸ் பல்கலைக்கழகம் ஒவ்வோர் ஆண்டும் `அறிவியலை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் போட்டியை நடத்தும். எப்போதும் எனது வகுப்புகளும், வகுப்பறைக்கு வெளியில்தான் இருக்கும் என்பதால் 2016-ம் ஆண்டு பாரிஸ் பல்கலைக்கழகம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டனர் என் மாணவர்கள். மூன்று மாதங்கள் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை ஆய்வுக் கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆண்டு 100 யூரோவை பரிசாக வென்றார்கள் மாணவர்கள்.

School Students

தேசிய அளவில் நடைபெறும் குழந்தைகள் மாநாடு, இந்திய அறிவியல் கழக மாநாடுகள் போன்றவற்றில் இதுவரை என் மாணவர்கள் சுமார் 50 விருதுகளை சர்வதேச, தேசிய, மாநில அளவில் பெற்றிருக்கிறார்கள். பாரிஸ் பல்கலைக்கழக விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார்கள். புத்தகத்தில் இருக்கும் அறிவியலை, நடைமுறை வாழ்க்கையில் எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்குக் கற்றுத்தருவேன். உதாரணத்திற்கு, உரத்தில் இயற்கை உரம், செயற்கை உரம் என்று இரண்டு வகை இருக்கின்றன என்பது மாணவர்களுக்குத் தெரியும். ஆனால் அதை தயாரிக்கும் முறை அவர்களுக்குத் தெரியாது.

நான் அதை செய்ய வைத்தேன். அதன் பிறகு, எந்த மரத்தின் இலைகள் தரமான உரங்களாக மாறி வளர்ச்சியைக் கொடுக்கின்றன என்பது வரை கண்டுபிடித்தார்கள். உயிரியல் மட்டுமல்லாமல் இயற்பியல் பாடத்திலும் என் மாணவர்கள் சளைத்தவர்கள் அல்லர். இணையக் கற்றைகளை அதிக தூரத்திற்கு செலுத்தும் ஆன்டெனா கருவியைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு இரண்டு முறை தேசிய விருதுகளும், ரூ.50,000 பணமும் பரிசாகப் பெற்றார்கள்.

புதுச்சேரி ஆசிரியர் ஜெயசுந்தர்

Also Read: ``வார்த்தைகளால் கற்பிப்பதைவிட இப்படிச் செய்தால் எளிதாகப் புரியும்!” - தேசிய விருது பெற்ற ஆசிரியை

தென்னிந்திய அளவில் அறிவியல் கண்காட்சிகளிலும் பல விருதுகளையும், பரிசுகளையும் என் மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். இயற்கை உரங்களை தயாரிப்பதற்காக சோலார் சக்தியில் இயங்கும் சைக்கிள், இயற்கை முறையில் நீர் சுத்திகரிப்பு செய்தல், மாடித்தோட்டம் அமைப்பது, சொட்டுநீர்ப் பாசனம், ஆளுக்கு ஒரு மரம் நடுவது என மாணவர்கள் பல்வேறு திறமைகளுடன் சிறந்து விளங்குகிறார்கள். கிராமப்புற மாணவர்களை விஞ்ஞானிகளாக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்” என்றார்.

தனக்கான விருது தருணத்திலும், தன் மாணவர்களைப் பற்றியே பேசினார் ஆசிரியர் ஜெயசுந்தர். அதனால்தான் அவர் நல்லாசிரியர்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yZpLpy
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*