உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக மதுரை மாநகர அதிமுக சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.
"சட்டமன்ற தேர்தலில் மற்ற தொகுதிகளில் வெற்றியை இழந்தது கூட கவலை அளிக்கவில்லை. ஆனால், தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தது கவலையளிக்கிறது.
மக்களுக்கு உண்மையாக உழைத்தோம். கொரோனா காலத்தில் வீட்டில் இல்லாமல் களத்தில் பணியாற்றினோம். அதனால்தான் தேர்தலில் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் வேலை செய்தோம்.
மக்கள் வெற்றியை தந்தார்கள். இதை எனது வெற்றியாக பார்க்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.

அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கி விடவில்லை. 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் பின்தங்கியது. அதில் நமது கூட்டணிக்கட்சிகள் நின்ற இடத்தில் 8 லட்சம் வாக்குகள் பின்தங்கியுள்ளோம். திமுக ஆட்சியில் 5 முறை மதுரை மாநகராட்சி பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால், மதுரைக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி கொடுக்கவில்லை.
ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மதுரைக்கு பத்தாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்தவர் ஜெயலலிதா. நாம் தொடங்கி வைத்த முல்லைபெரியாறு அணை லோயர் கேம்ப் குடிநீர் திட்டம் மூலம் மதுரையில் உள்ள அனைவருக்கும் குடிநீர் கிடைக்க உள்ளது. மதுரையில் 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை பெருகினாலும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க உள்ளது.
முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் குடிநீர் திட்டம் நிறைவேறும்போது நாம்தான் மாநகராட்சியின் ஆட்சியில் இருக்க வேண்டும். ஏனென்றால் மாநகராட்சி தலைமையில்தான் அந்த விழா நடைபெறும்.
வளர்ந்த நகரங்களுக்கு இணையாக மதுரையில் மேம்பாலங்களையும், பறக்கும் பாலங்களை கட்ட நடவடிக்கை எடுத்தோம். வைகை ஆற்றில் இருபுறமும் கரைகளை எழுப்பி கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுத்தோம். அதன் விளைவால் இன்னும் ஒரு வருடத்தில் வைகை கரையோரத்தில் பூங்காங்கள், ஜிம்கள் வரப் போகின்றன.
Also Read: `அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து!’ - சொல்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
ஆகவே, மதுரை மாநகராட்சி மேயர் பதவியை நாம் பிடித்தால் தான் அனைத்தையும் தொடங்கி வைக்க முடியும். வரும் உள்ளாட்சித்தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்பட வேண்டும்" என்றார்.
மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு தன் குடும்பத்திலிருந்தே ஆளை இறக்க திட்டமிட்டுள்ளதால் கட்சியினருக்கு இப்போதே மோட்டிவேஷன் க்ளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார் செல்லூரார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lSo0GZ
via
