`அந்த 60 ஓட்டுகளுக்கு நன்றி!' - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மூன்றடி உயர மாற்றுத்திறனாளி பெண்

0

சாமான்ய மக்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் வகையிலான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் பலரும் ஆர்வத்துடன் போட்டியிட்டனர். அந்தவகையில், நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உள்பட்ட தடியம்பட்டி கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் மாற்றுத் திறனாளி பெண்ணான மயிலம்மாள் என்பவர் போட்டியிட்டார்.

மூன்று அடி உயரம் கொண்ட மயிலம்மாள், தன்னுடைய உருவத்தை நினைத்து ஒதுங்கி இருக்காமல் தனக்கான ஜனநாயக வாய்ப்பைப் பயன்படுத்தி போட்டியில் இறங்கினார். அவரை எதிர்த்து அதே வார்டுக்கு சசிகலா என்பவரும் போட்டியிட்டார்.

சசிகலாவுடன் மயிலம்மாள்

Also Read: `எதுக்காக பணத்தைச் சேர்த்து வைக்கணும் சார்!' - கிருமிநாசினியுடன் தெருவில் இறங்கிய மாற்றுத் திறனாளி

சசிகலா ப்ளஸ் டூ படித்திருப்பவர். மயிலம்மாள் 11-வது வரை படித்திருக்கிறார். வார்டில் உள்ள வாக்காளர்களிடம் மயிலம்மாள் தனக்குத் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். வாக்கு எண்ணிக்கை தினமான இன்று அவர் முடிவைத் தெரிந்து கொள்வதற்காக ஆர்வத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ராணி அண்ணா கல்லூரிக்கு வந்திருந்தார்.

வாக்கு எண்ணிக்கையில், மயிலம்மாளுக்கு 60 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துக் களமிறங்கிய சசிகலாவுக்கு 140 வாக்குகள் கிடைத்தன. அதனால் 80 வாக்குகள் வித்தியாசத்தில் சசிகலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தான் தோல்வி அடைந்த போதிலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வெளியே வந்த மயிலம்மாள், தன்னை வென்ற சசிகலாவுக்குக் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். அதை எதிர்பார்க்காத சசிகலா ஒரு நிமிடம் திகைத்தபோதும் பின்னர் அவரும் மயிலம்மாளிடம் ஆறுதலாகப் பேசிவிட்டுச் சென்றார்.

வாழ்த்து தெரிவித்த மயிலம்மாள்

Also Read: உள்ளாட்சித் தேர்தல்: `2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!’-கவனம் ஈர்த்த 22 வயது இளம் பட்டதாரிப் பெண்

இது பற்றிப் பேசிய சசிகலா, ``தேர்தலில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்டபோதிலும் இருவரும் ஒரே கிராமம் என்பதால் நல்ல அறிமுகம் உண்டு. தான் தேர்தலில் தோற்ற போதும்கூட மயிலம்மாள் என்னைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் உருவத்தில் சிறியவராக இருக்கலாம். ஆனால், உள்ளத்தால் உயர்ந்தவராக இருக்கிறார்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

மேலும் மயிலம்மாளிடம் பேசினோம். ``தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது வார்டுக்கு உட்பட்ட வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து எனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்று மாற்றுத்திறனாளிப் பெண்ணான என்னை மதித்து 60 பேர் வாக்களித்து இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

மயிலம்மாள்

என்னை மதித்து வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் வாக்களிக்காத மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இனி முயல்வேன். இந்தத் தோல்வி எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் எனக்காக வாக்கு சேகரித்த என் தந்தை வருத்தப்படுவார் என நினைக்கும்போதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது” என்றார் வருத்தமான குரலில்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2YF4pR9
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*