ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அரசியல் கட்சியினருடன் மோதிய சுயேச்சைகளும் சில இடங்களில் வெற்றியைக் கைப்பற்றியுள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உள்பட்ட 5-வது வார்டில் தி.மு.க, பா.ஜ.க, அ.ம.மு.க என அரசியல் பிரதான கட்சிகளும், இரு சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.
இந்த வார்டுக்கான தேர்தலில் போட்டியிட்ட உமாதேவி என்ற சுயேச்சை வேட்பாளர், ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா சங்கரின் உடன்பிறந்த தங்கை. மேல இலந்தைக்குளம், பன்னீரூத்து, சுண்டங்குறிச்சி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வார்டில் அவர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
Also Read: உள்ளாட்சித் தேர்தல்: `2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!’-கவனம் ஈர்த்த 22 வயது இளம் பட்டதாரிப் பெண்
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டதில், உமாதேவிக்கு 2,219 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் தி.மு.க வேட்பாளரான முருகேஸ்வரி என்பவர் 1,218 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அதனால் சுயேச்சை வேட்பாளரான உமாதேவி 1,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இது குறித்து அவரிடம் பேசினோம். ``நான் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தாய், தந்தை இருவருக்குமே படிக்கவோ, கையெழுத்துப் போடவோ தெரியாது. விவசாயக் கூலி வேலை செய்து எங்களைப் படிக்க வைத்து, என் அண்ணனை ஐ.ஏ.எஸ் ஆக்கியிருக்கிறார்கள். நான் எம்.எஸ்சி, மற்றும் காபி தரம் பார்ப்பது தொடர்பாக முதுகலை டிப்ளோமா படித்துள்ளேன்.
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்த நான், கொரோனா காலத்தில் சொந்த ஊரான மேல இலந்தைக்குளத்தில் பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதில் இரண்டு முறை தேர்வுகளில் வென்று இன்டர்வியூ வரை சென்றிருக்கிறேன்.
Also Read: `அந்த 60 ஓட்டுகளுக்கு நன்றி!' - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மூன்றடி உயர மாற்றுத்திறனாளி பெண்
எங்களுடைய பகுதி மிகவும் பின்தங்கிய விவசாயக் குடிமக்கள் வசிக்கும் பகுதி. இங்கு எந்த அடிப்படை வசதிகளையும் யாரும் செய்து கொடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வந்தபோது பல்வேறு கட்சிகளில் இருந்தும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபோது இந்த மக்களுக்கு உதவும் வகையில் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் என்னைப் போட்டியிடுமாறு என் தாய் சொன்னார். அதை என் கணவரும் ஏற்றுக் கொண்டதால் போட்டியிடத் தீர்மானித்தேன்.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவதால் வெற்றியைச் சுலபமாக எட்டிப் பிடிக்க முடியாது என்பது புரிந்தது. அதனால் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரும் கலங்கிய நிலையில் குடிக்க உகந்ததாக இல்லாததை மாற்றி தாமிரபரணி தண்ணீர் கிடைக்க முயல்வேன் என வாக்குறுதி கொடுத்தேன்.
விவசாயிகள் நிறைந்த இந்தப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையமும் கால்நடை மருத்துவமனையும் அவசியம். அதற்கு நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னேன். படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் அவர்கள் அரசு வேலைக்குச் செல்லும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னேன்.
மக்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்வதாகச் சொன்னதை அவர்கள் நம்பியதால், அரசியல் கட்சிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எனக்கு வாக்களித்தார்கள். அதிலும் குறிப்பாக, எல்லா சமூகத்தினரும் எனக்காக ஒருமித்து வாக்கு கேட்டு வந்ததோடு, வாக்களித்து வெற்றிபெற வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தச் சமூக ஒற்றுமை தொடர நிச்சயமாகப் பாடுபடுவேன்.
ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற கனவில் இருந்த நான் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பை மக்களின் நலனுக்காக முழுமையாகச் செயல்படுத்துவேன்” என்றார் உறுதியுடன்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3v4BstQ
via
