கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருப்பத்தூரைச் சேர்ந்தவர் கோபால் (வயது: 54). மறைந்த பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு தனது தோட்டத்துக்குச் சென்றிருக்கிறார்.
Also Read: மாமனாரைக் கொலை செய்த மருமகன்; முன்னாள் தி.மு.க எம்.பி பேரன் படுகொலையில் நடந்தது என்ன?
அப்போது, பக்கத்து தோப்பில் மறைந்து இருந்த 5 பேர் கோபாலை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த கொலை குறித்து, தகவல் அறிந்த லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விவசாய நிலத்தில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கோபாலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட தூரம் மட்டுமே மோப்ப நாய் சென்றது. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளி மாவட்டத்தில் இருந்து கூலிப்படையை வரவழைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட கோபாலுக்கு பொன்மணி என்ற மனைவியும், இரண்டு பெண், இரண்டு ஆண் என்று நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை அடுத்த கருப்பத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, வெடித்து காயத்துடன் கோபால் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. பசுபதி பாண்டியனின் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவர் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், இந்த கொலை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ljHLXj
via
