கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிரடியாக பேசி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தற்போது ஜாமீனுக்காக நீதிமன்றங்களில் மாறிமாறி மனுச்செய்து கொண்டிருக்கிறார்.
அமைச்சராக இருந்தபோது திமுக உட்பட பல கட்சிகளையும், அரசியலை கடந்து தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து வந்தவர் ராஜேந்திர பாலாஜி. சொந்தக் கட்சியை சேர்ந்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுடன் மோதல் ஏற்பட்டு கட்சிக்குள் கோஷ்டிப்பூசலையே உருவாக்கியது.
Also Read: `ராஜேந்திர பாலாஜி பாஜக-வுக்குச் சென்றாலும் விட மாட்டோம்!' - அமைச்சர் நாசர் காட்டம்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் அமைதியானவர், திடீரென்று டெல்லி சென்று பாஜக-வில் இணையப்போவதாக செய்தி வெளியானது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆவின் நிறுவனத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளதுதான் இப்போது ராஜேந்திர பாலாஜிக்கு தலைவலியாகியிருக்கிறது.
Also Read: அமாவாசை டு நாகராஜசோழன்: கே.டி.ராஜேந்திர பாலாஜி வளர்ந்த கதை!
மேலும், ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது, அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3 வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடபட்டது. இந்த வழக்கில் 3 வது நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை, விசாரித்த உச்ச நீதிமன்றம், 3-வது நீதிபதி எந்த உத்தரவும் இடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்துள்ளது.
அந்த வழக்கிலிருந்து தற்காலிகமாக மீண்டதில் நிம்மதி அடைந்த ராஜேந்திர பாலாஜி மீது, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு கடந்த மாதம் 24-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, சாத்தூரில் வரவேற்பு அளித்தபோது, கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தரப்புக்கும் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கிளைச்செயலாளர் வீராவே ரெட்டி தாக்கப்பட்டார்.
Also Read: `சொத்துக்குவிப்பு வழக்கு டு ஆவின் முறைகேடு... இறுகும் பிடி!' - பாஜக-வில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி?
அவர் கொடுத்த புகாரில் ராஜேந்திரபாலாஜி உட்பட 11 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன்பாலாஜி மனு செய்தார். ஆனால் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த சூழலில், தன்னை கைது செய்ய காவல்துறை முயற்சி எடுப்பது தெரிந்ததும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனு செய்தார். ``ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க முன் ஜாமின் வழங்க வேண்டும்" என ராஜேந்திர பாலாஜி தரப்பில் முறையீடு முன்வைக்கப்பட்டது.
Also Read: 'தூது'விட்ட ராஜேந்திர பாலாஜி முதல் ஐ.டி வளையத்தில் தி.மு.க பிரமுகர் வரை கழுகார் அப்டேட்ஸ்...
அதற்கு நீதிபதி, ``அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலோ, தலைமை நீதிபதியிடமோ முறையிடலாம்" என தெரிவித்தார். வழக்கை விசாரிக்க ராஜேந்திரபாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கிரிமினல் வழக்கு ராஜேந்திர பாலாஜியை நிம்மதியிழக்கச் செய்துள்ளது என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுக-வினர்.
அதே நேரம், ”திமுக அரசு அண்ணன் மீது பல வழக்குகளை போட்டு பழிவாங்க நினைக்கிறது. அதற்கு அதிமுகவினர் சிலரும் துணை போகிறார்கள். அதிலிருந்து சட்டப்படி மீண்டு வருவார்' என்கிறார்கள் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள்.
இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை அறிய அவர் அலைபேசியை தொடர்பு கொண்டோம். ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
'எல்லாம் மேல இருப்பவன் பாத்துக்குவான்' என்று ராஜேந்திர பாலாஜி சூசகமாக பேசியது, முன்பு அதிமுக-வில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வரும் அவருக்கு, மேலிருப்பவரும் சரி, உடனிருப்பவர்களும் சரி, காப்பாற்ற வராததால் அதிருப்தியில் இருக்கிறாராம்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3aeSk7s
via
