கோவை மாவட்டம், வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் இருக்கிறது கல்லார் கிராமம். அங்கு, காடர் இனத்தைச் சேர்ந்த 23 குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெருமழை, பாதி ஊரை அழித்துவிட்டது. இதனால், பாதுகாப்புக்காக அதே வனத்தின் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து குடிசை போட்டு வசித்துவந்தனர்.
Also Read: கறார் வனத்துறை... கண்ணீரில் காடர்கள்!
ஆனால், வனத்துறையினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, அந்த மக்களை தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் லைன் வீடுகளில் தங்க வைத்தது வனத்துறை.
`எங்களுக்கு இங்கே வாழ்வாதாரம் இல்லை. எனவே, தெப்பக்குளம் மேடு பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
இதை வலியுறுத்தி கடந்தாண்டு கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றினர். காடர் மக்களின் தொடர் முயற்சி காரணமாக, தெப்பக்குளம் மேடு பகுதியில் அதிகாரிகள் நில அளவீடு செய்தனர்.
இதனால், விரைவில் தங்களுக்கு மாற்று இடம் கிடைத்துவிடும் என்று காடர் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஓராண்டை கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்க வலியுறுத்தி, கடந்த 2-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காடர் பழங்குடி மக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கொட்டும் மழை, கடும் குளிர் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் காடர் மக்கள் தொடர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read: `20 வருடங்களுக்குப் பிறகு மின் இணைப்பு' - மகிழ்ச்சியில் பழங்குடியின மக்கள்!
தொடர்ந்து மூன்று நாள்களாக அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர்.
ஆனால், அரசுத்தரப்பில் நடவடிக்கை இல்லாததால் வன உரிமைச் சட்டத்தின் படி அந்த மக்களே தெப்பக்குளம் மேடு பகுதிக்கு குடியேறினார்கள். இதுகுறித்து பழங்குடி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஏக்தா பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தனராஜ் கூறுகையில், ``வன உரிமைச் சட்டம் 2006-ன்படி, வனத்தில் வாழ்வதற்குப் பழங்குடி மக்களுக்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி, வனத்துறை தாமதித்தால், பழங்குடி மக்களே கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றித் தங்களுக்கு விருப்பமான இடத்தில் குடியேறலாம். அதை அடிப்படையாக வைத்து தெப்பக்குள மேட்டில் குடியேறியுள்ளனர். அரசாங்கம் இவர்களுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uFlwOx
via
