தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, சின்னையா தெரு மைனர் பங்களாவிற்கு எதிரில் அமைந்திருக்கிறது பிரபல தனியார் மருத்துவமனை. திங்கள் கிழமை இரவு இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையின் மெடிக்கல் ஷாப்பிற்கு வந்திருக்கிறார்கள்.
மெடிக்கல் ஷாப்பில் பணியிலிருந்த இளம் பெண் ஒருவரிடம் போதை தரக்கூடிய தூக்க மாத்திரைகளை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த பெண் ஊழியர் மருத்துவர் பரிந்துரை இல்லாததால் மாத்திரை தர மறுத்துவிட்டார். அந்த இளைஞர்கள் செய்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.
இளைஞர்களில், ஒருவன் மட்டும் வெளியே வந்து இரண்டு சக்கர வாகனத்தில் ஏறிச் செல்வதற்குத் தயாராக மற்றொரு இளைஞன் தன்னுடைய சட்டைக்குள் இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த மூன்றடி நீளம் கொண்ட அரிவாளை கையில் எடுத்து கொண்டு மெடிக்கல் ஷாப் உள்ளே செல்கிறான்.உள்ளே இருக்கும் பெண் ஊழியர் அரிவாளைக் கண்டதும் அலறுகிறார். அதற்குள் தூக்க மாத்திரைகளை திருடிக் கொண்டு அந்த இளைஞர் வேகமாக வெளியே ஓடி வருகிறான்.
பெண் ஊழியரின் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த பலரும் ஓடி வந்தனர். இளைஞர் ஒருவர் மாத்திரையை எடுத்துக் கொண்டு ஓடிய இளைஞரைப் பிடிக்க முயல்கிறார். அரிவாளை தூக்கி ஓங்கி வெட்டுவது போல் மறைத்தவரை மிரட்டி விட்டு ஓடிச் சென்று தயாராக நின்ற டூ வீலரில் ஏறிக்கொள்ள இருவரும் தப்பிச் சென்று விடுகின்றனர். பிரபல மருத்துவமனையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரண்டு இளைஞர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி மாத்திரைகளை அள்ளிச் சென்ற சம்பவம் டாக்டர்கள் மட்டுமின்றி பொது மக்களிடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அந்த தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணனிடம் புகாரளித்தார். இந்தத் தகவல் தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப் பிரியாவிற்கு சென்றதையடுத்து குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, செங்கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீஸார் மெடிக்கல் ஷாப்பிற்கு வந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
Also Read: மதுபோதை; கத்தியைக் காட்டி மிரட்டல்! - சாலையில் அமர்ந்து உணவருந்திய தேனி அ.தி.மு.க பிரமுகர்
கேமராவில் பதிவான அடையாளங்களை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர்கள் பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (20), பட்டுக்கோட்டை தச்சுத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (19) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை மகாராஜா சமுத்திரம் காட்டாற்றுப் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு சென்ற போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம், ``போதை பழக்கத்திற்கு ஆளான இரண்டு இளைஞர்கள் மெடிக்கல் ஷாப்பில் அரிவாளைக் காட்டி மிரட்டி போதை மாத்திரைகளை அள்ளிச்சென்றனர். இதையடுத்து மஹாராஜா சமுத்திரம் ஆற்றில் பதுங்கியிருந்த இரண்டு பேரையும் கைது செய்ய சென்றபோது பாலத்திலிருந்து குதித்து தப்பிக்க முயன்றனர். இதில் ஹரிஹரனின் வலது கையும், அதே போல் ராஜேஷின் வலது காலும் உடைந்தது. இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தோம்.
பின்னர், இருவருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம். உடனடியாக குற்றவாளிகளைப் பிடித்த போலீஸ் டீமை எஸ்.பி ரவளிப்ரியா மேடம் பட்டுக்கோட்டைக்கு வந்து பாராட்டினார்." எனத் தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3BcuXrb
via
