புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நேற்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு இது.
”புதுச்சேரியில் ஆவணமின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவதாகவும், உரிய உரிமமின்றி இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுவதாகவும் போக்குவரத்துத் துறைக்குப் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனால் கீழ்கண்ட விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆவணமின்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம்:
சாலைப் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழுவின் அறிவுறுத்தலின்படியும், மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன்படி புதுச்சேரியில் இயக்கப்படும் அனைத்து மோட்டார் வாகனங்களும் கீழ்கண்ட ஆவணங்களைக் கண்டிப்பாக வைத்திருத்தல் வேண்டும். இவ்வாறு ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவது மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு முரணானது. ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்பட்டால் ,வாகனங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில் உரிமையாளர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காப்பீடு பெறுவதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் உண்டாகும்.
மேலும், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கல்வி நிறுவன வாகனங்கள் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காமல் இயக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, கீழ்க்கண்ட ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பொது இடங்களில் மோட்டார் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும்.
1.பதிவுச் சான்றிதழ் (ஆர்சி)
2.பெர்மிட்
3.தகுதிச் சான்றிதழ் (எஃப்சி)
4.காப்பீட்டுச் சான்றிதழ் (இன்ஷூரன்ஸ்)
5.ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்)
6.மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்
போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 56- ன்படி தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள், பதிவுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களாகக் கருதப்படும். மேலும் பிரிவு 1921-ன்படி தகுதிச் சான்றிதழின்றி இயக்கப்படும் வாகனம் முதல் முறை எனில் ரூ.2,000 முதல் 5,000/-வரையிலும், இரண்டாம் முறையிலிருந்து ரூ.5,000-10,000 வரையிலும்அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் நடத்தும் வாகன ஆய்வுகளின்போது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுதல்:
சொந்த உபயோகத்திற்கெனப் பதிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் தமது வாகனங்களை உரிய அனுமதி இல்லாமல் வாடகைக்கு விடுவதும், பொதுமக்களை நாள் மற்றும் மாத வாடகைக்கு ஏற்றிச் செல்வதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உரிய அனுமதி பெற்ற போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பெற்றிருக்கும். ஓன் போர்டு வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பொதுமக்களும் நிறுவனங்களும் வாடகைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறு செய்யும் வாகன உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அத்தகைய வாகனப் பதிவுகள் ரத்து செய்யப்படும் என்றும் புதுச்சேரிப் போக்குவரத்துத் துறை தெரிவித்துக்கொள்கிறது.
Also Read: `கேரள போலீஸின் கடிதம் வந்தது; அமலாபால் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!'-புதுச்சேரி போக்குவரத்து ஆணையர்
உரிமம் இன்றி இயங்கும் இரு சக்கர வாகனங்கள்:
புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிமம் ஏதும் பெறாமல், மோட்டார் சைக்கிள்களை பொது மக்களுக்குச் சிலர் வாடகைக்கு விடுவதாகப் புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை போக்குவரத்து துறையின் உரிய உரிமம் பெற்றபின் வாடகைக்கு விடுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு உரிய உரிமம் இல்லாமல் வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்கள்/ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து துறை எச்சரிக்கிறது. மேலும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் சட்ட விரோத வாகனப் பயன்பாட்டில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3GZOHRv
via
