"நான் எல்லா தமிழ்படங்களும் பார்க்கிறேன், தமிழ் ஹீரோக்கள்தான் என் படங்களைப் பார்க்குறதில்லை'' என ஒரு விருது மேடையில், 'தமிழ் சினிமாவைக் கவனிக்குறீங்களா' எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருப்பார் மெகா ஸ்டார் மம்முட்டி. ஆனால், தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகப் பட்டாளங்களின் கண்களும் இப்போது மலையாள சினிமாவின்மீதுதான் குவிந்திருக்கின்றன. வெளிவந்த படங்களுக்கான விமர்சனங்கள், வெளிவரப்போகும் படத்துக்கான அப்டேட்டுகள் என மல்லுவுட்டின் ஒவ்வொரு நகர்வையும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர், தமிழ்நாட்டில் இருக்கும் மலையாள சினிமா ரசிகர்கள்.
கொரோனா காலத்துக்கு முன்பாகவும் மலையாளத் திரைப்படங்களைப் பார்க்கும், கவனிக்கும் ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் லாக்டௌனுக்குப் பின்னால் அது பெரியளவில் அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. கடந்த தசாப்சத்தத்தில் மலையாளத்தில் வெளியான படங்கள் குறித்த விமர்சனங்களை கடந்த இரண்டாண்டுகளாக தமிழில், அதிகமாகக் காணமுடிகிறது. அதேவேளை, வெளியான சமயத்திலேயே தமிழ் மலையாளம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் ஈர்த்து, பல்வேறு விமர்சனங்களையும் விவாதங்களையும் உண்டாக்கி, இந்திய குடும்ப அமைப்பு குறித்த கேள்விகளை எழுப்பிய ஒரு படம் 'தி கிரேட் இன்டியன் கிச்சன்'. அதில் நாயகியாக நடித்த நிமிஷா சஜயனுக்கு இன்று பிறந்தநாள். தி கிரேட் இன்டியன் கிச்சனுக்குப் பிறகு, பகத் பாசிலுடன் அவர் இணைந்த நடித்த மாலிக் திரைப்படமும் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. தி கிரேட் இன்டியன் கிச்சனில், புதிதாகத் திருமணமான பெண்ணின் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்த நிமிஷா, மாலிக்கில் வயதான தோற்றத்திலும் மிகக் கச்சிதமாக நடித்திருப்பார்.
'என்னது கிரேட் இன்டியன் கிச்சன்ல நடிச்ச பொண்ணும் மாலிக்'ல நடிச்சவங்களும் ஒரே ஆளா, அந்தப் பொண்ணுக்கு 24 வயசுதான் ஆகுதா,சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி மலையாளமே சரியா தெரியாதா, மும்பையில வளர்ந்த பொண்ணா' என ஆச்சர்யமான பல கேள்விகளுக்கான விடை 'ஆம்' என்பது மட்டுமே. மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாநாயகியாகவும் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த நடிகையாகவும் திகழும் நிமிஷா சஜயனுக்கு வயது வெறும் 25 தான். ஆனால், மலையாளத் திரையுலகுக்குள் வந்து கடந்த ஐந்தாண்டுகளில் அவர் நிகழ்த்தியது எல்லாமே மாயாஜாலம்.
2017-ல் மலையாள சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்த நிமிஷாவுக்கு, தொண்டிமுதலும் திரிக்ஷாக்ஷியும்தான் முதல் படம். பேருந்துப் பயணத்தில் நகையைப் பறிகொடுத்த திருமணமான பெண்ணின் கதாபாத்திரம். முதல் படத்திலேயே வயதுக்குப் பொருத்தமில்லாத, மிகக் கனமான பாத்திரம். ஆனால், மலையாள சினிமாவின் நடிப்பு அரக்கர்களான பகத் பாசிலுக்கும் சூரஜ் வெஜ்ஜுரமூடுக்கும் இணையாக நடிப்பில் அசத்தியிருப்பார் நிமிஷா. படம் வெளியானபோது அவருக்கு வயது 20-க்கும் குறைவுதான். ஆனால், ஸ்ரீஜா என்கிற கேரக்டரில் கொஞ்சமும் ஏற்ற இறக்கம் இல்லாது மிக நேர்த்தியாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். உதாரணமாக, படத்தின் தொடக்கத்தில், சூரஜ்ஜுடன் ஒரு சோடாக்கடையில் நடக்கும் உரையாடலில் 'பஞ்சார' என சிரித்த முகத்தோடு சொல்லும் இடமாகட்டும், காவல்நிலையத்தில் பகத்தின் முகத்துக்கு முன்னாள் நின்று 'கள்ளா' எனக் கோபமாகப் பேசும் இடமாக இருக்கட்டும், ரசிகர்களின் மனங்களில் ஸ்ரீஜாவாகே நின்றிருப்பார் நிமிஷா.
அடுத்ததாக, தேசிய விருது வென்ற மலையாள இயக்குநரான, மதுபாலனின் இயக்கத்தில் வெளியான 'ஒரு குப்ரசித்த பையன்'. நடிகை சரண்யா செண்பகம்மாள் எனும் கதாபாத்திரத்தில் தமிழ்ப் பெண்ணாகவே நடித்திருக்கும் இந்தப்படத்தில், அவரின் மரணத்தில், சிக்கவைக்கப்பட்ட ஒரு அப்பாவி இளைஞனுக்காக வாதாடும் வழக்கறிஞர் ஹென்னா எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நிமிஷா. இந்தப் படத்திலும் சீனியர் வழக்கறிஞராக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவுக்கு டஃப் கொடுக்கும் நீதிமன்றக் காட்சிகளைப் போலவே நடிப்பிலும் அவருக்கு டஃப் கொடுத்து அசத்தியிருப்பார். தயக்கத்தோடு பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் தொடங்கி, ஒரு கட்டத்தில் நடுக்கத்தோடு உடைந்தழுது, இறுதியாக தன் தோளின் மேலிருக்கும் நெடுமுடி வேணுவின் கையை விடுத்து, 'I will be a better human being' சொல்வது, என மிக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நிமிஷா.
'ஒளிதிவசத்தே களி' எனும் மலையாள சினிமாவின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநர் சனல்குமார் சசிதரனின் இயக்கத்தில் வெளியான 'சோழா' திரைப்படத்தில் ஜானகி எனும் மலைவாழ் பெண்ணாக நடித்திருப்பார் நிமிஷா. எட்டாவது படிக்கும் பள்ளி மாணவி, தனது காதலுடன் வெளியில் சென்று அங்கே அவளுக்கு நடக்கும் அசம்பாவிதங்கள்தான் படத்தின் மையக்கருவாக இருக்கும். நிமிஷாவைச் சுற்றித்தான் ஒட்டுமொத்த திரைப்படமும் நகரும். ஆம், நிமிஷாவைச் சுற்றித்தான் ஒட்டுமொத்த திரைப்படமும் நகரும். தான் ஏறிய வண்டியில், காதலன் மட்டுமல்லாது, மற்றொரு நபரும் இருப்பதைக்கண்டு, நான் வீட்டுக்குப் போகணும் என காதலனுடன் கோபமாகச் சண்டையிடும் இடத்திலும் சரி, அவனுடன் ரோட்டோரக் கடைகளில் சாப்பிடும்போது குறும்போடு விளையாடும் இடத்திலும் சரி, படத்தின் பிற்பாதியில் வீட்டுக்குப் போகமாட்டேன் என முரண்டு பிடிக்கும் இடத்திலும் சரி, கடைசியாக காதலின் தலையில் கல்லைப் போட்டு அப்பாவியாக நிற்கும் இடமானாலும் சரி நடிப்பால் மிரட்டியிருப்பார் நிமிஷா. தமிழில், அப்படியொரு கதாபாத்திரத்தையோ நடிப்பையோ உதாரணத்துக்குக்கூடச் சொல்லமுடியாத நிலைதான் இன்றளவும் இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.
அவர் நடித்த நயாட்டு படத்தின் மையக்கருவில் சில சிக்கல்கள் இருந்தாலும், நிமிஷாவின் நடிப்பு வழக்கம்போலவே அப்ளாஸை அள்ளியது. பகத் பாசிலுடன் இணைந்து நடித்த மாலிக்கிலும் காதல் கொள்ளும் இளம்பெண்ணாக, கடமைமிக்க வயதான பெண்மணியாக என படத்துக்குப் படம் என்றில்லாமல், ஒரே படத்திலேயே நமக்கு வேறு வேறு நபராகக் காட்சி தந்திருப்பார் நிமிஷா. மாலிக்கில் நிமிஷா ரத்த சொந்தமான மூன்று மரணங்களை எதிர்கொள்வார். மூன்றுக்கும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள், முகபாவனைகள் என மிரட்டியிருப்பார். அவர் நடித்த, இடா, 41, மாங்கல்யம் தந்துனானே போன்ற படங்களும் அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இணையத்தில் மோஸ்ட் வான்டன்ட் டெம்ப்ளேட்டாக இருக்கும் அந்நியன் பிரகாஷ் ராஜின், இவனும் அவனும் ஒரே ஆளா என்பதுபோல ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும், ' அவங்களும் இவங்களும் ஒரே ஆளா' என நம்மை அதிசயிக்க வைக்கிறார் நிமிஷா.
மம்முட்டியின் தங்கையாக நடித்த ஒண்ணில் அவரின் நடிப்புக்குத் தீனிபோடும் கதாபாத்திரம் இல்லையென்றாலும், வரும் 20-ம் தேதி நிவின்பாலியுடன் அவர் இணைந்து நடித்த துறைமுகம் வெளியாகவிருக்கிறது. பீரியட் படமாக வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தில், உம்மானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நிமிஷா. 'சும்மாமே ஆடுவாங்க பீரியட் படமா சொல்லவே வேண்டாம், தலைவி நடிப்பில் அசத்தியிருப்பாங்க' என இப்போதே அவரின் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
Also Read: ஃபகத்தின் `மாலிக்' - பிராண்டோவின் `காட்ஃபாதர்', கமல்ஹாசனின் `நாயகன்' கிளாஸிக் வரிசையில் சேருமா?!
நடிப்பில் மட்டுமல்ல, பொதுநலன் சார்ந்த விஷயங்களிலும் நிமிஷாவுக்கு ஈடுபாடு அதிகம். சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களில் களத்தில் நின்றார் நிமிஷா. தற்போது, குடும்ப வன்முறைகளுக்கும் வரதட்சணை பழக்கவழக்கங்களுக்கு எதிரான கேம்பெயினின் அம்பாஸிடராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
'உன் வயசு என் அனுபவம்' என சீனியர் ஜூனியர் குறித்த உரையாடலில் ஒரு சொல் வழக்கு உண்டு. ஆனால், 25 ஆண்டுகாலம் திரையுலக அனுபவத்தில் பலர் சாதிக்காத விஷயங்களை, 25 வயதுப் பெண்ணாகச் சாதித்திருக்கிறார் நிமிஷா. இன்னும் வயதிருக்கிறது, சரியான வாய்ப்புகள் அமைந்தால், இந்தியாவின், ஏன் உலகின் தலைசிறந்த நடிகையாக வருவதற்கும் நிமிஷாவுக்கு வாய்ப்பிருக்கிறது.
வாழ்த்துகள் நிமிஷா!
from தமிழ் சினிமா https://ift.tt/3eOkE31
via Umn news Tamil
