15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மனைவியைப் பார்க்க வந்த கணவர்... வெட்டிக் கொன்ற மகன்! - நடந்தது என்ன?

0

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கரும்பாயிரம். இவர் முதல் மனைவி பெயர் ராதிகா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கரும்பாயிரத்தின் இரண்டாவது மனைவி சிவசங்கரி. தன் இரண்டாவது மனைவியுடன் கரும்பாயிரம் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். கிட்டதட்ட15 வருடங்களாக முதல் மனைவியைப் பார்க்க வரவில்லை எனச் சொல்லப்படுகிறது.

தந்தையை கொலை செய்த மகன் ஜீவா

சிங்கப்பூரில் வீட்டு வேலை பார்த்து வந்த ராதிகா இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் வந்துள்ளார். இந்த தகவல் கரும்பயிரத்திற்கு தெரியவர ராதிகாவைப் பார்ப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்றிருக்கிறார். அப்போது ராதிகாவுக்கும், கரும்பாயிரத்துக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, கரும்பாயிரம் மண்வெட்டியால் ராதிகாவை அடிக்க சென்றுள்ளார்.

இதை ராதிகாவின் மூத்த மகன் ஜீவா தடுத்துள்ளார். அதனால், இருவரையும் கரும்பாயிரம் அடித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் அம்மாவையும், பிள்ளையையும் விடமாட்டேன் வெட்டியே தீருவேன் என சத்தம் போட்டபடி வீட்டுக்கு அருகிலேயே சுற்றி வந்துள்ளார். இதனால் ஜீவா தன் நண்பர்களான ஆண்டனி ஆகாஷ், பர்கின்ஸ் ஆகிய இரண்டு பேருடன் சேர்ந்து தன் அப்பாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்.

கைது செய்யப்பட்டவர்கள்

நள்ளிரவு 12 மணிக்கு இரண்டு அரிவாள்களை எடுத்துகொண்டு நண்பர்கள் இரண்டு பேருடன் தன் வீட்டுக்கு வந்துள்ளார் ஜீவா. அப்போது வீட்டுக்கு முன் நின்ற கரும்பாயிரத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். அலறியபடி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஜீவா அவர் நண்பர்களுடன் தப்பித்து ஓடிவிட்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீஸார் மறைந்திருந்த குற்றவாளிகளைக் கைது செய்தனர். இது தொடர்பாக தமிழ் பல்கலைக்கழக உதவி ஆய்வாளர் அபிராமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து போலீஸ் தரப்பில், ``தன் முதல் மனைவி சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில், கரும்பாயிரம் அவ்வப்போது தஞ்சாவூர் வருவார்.

அப்போது தன் மகன் ஜீவாவை குடி போதையில் அடிப்பார். இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்நிலையில் ராதிகா சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார். அதனை கேள்விப்பட்ட கரும்பாயிரம் 15 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை பார்த்த வந்துள்ளார். அப்போது தகராறு ஏற்பட்ட நிலையில், சொந்த மகனே நண்பர்களுடன் சேர்ந்து வீட்டு வாசலிலேயே தன் தந்தையை வெட்டிக் கொலை செய்து விட்டார்" என்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/RSguLYe
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*