புதுக்கோட்டை, மண்டையூரைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி முத்துலெட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள். ஒருவர் நோய்வாய்ப்பட்டு நீண்ட நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மற்றொருவருக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிலர், உங்க வீட்டுக்குள்ள ஏதோ பிரச்னை இருக்கு, பூசாரிகள் பார்த்தா அதை நிவர்த்தி செய்ய முடியும்னு சொல்லியிருக்கின்றனர்.
அப்போது, சரவணின் உறவினர் ஒருவர் திருச்சி, துவரங்குறிச்சி அருகே இருக்கும் பூசாரி மணி என்பவரின் முகவரியைக் கொடுத்திருக்கிறார். உடனே, சரவணனும், முத்துலெட்சுமியும், பூசாரி மணியை அணுகி தங்கள் வீட்டு பிரச்னைகளை கூறியுள்ளனர்.

நேரடியாக வந்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன் என்று கூறிய பூசாரி மணி, துவரங்குறிச்சியைச் சேர்ந்த சக பூசாரியான முருகேசன், மருங்காபுரியைச் சேர்ந்த ராசு ஆகிய மூன்று பேரும் சரவணனின் வீட்டுக்குச் சென்றனர். வீட்டைச் சுற்றிப்பார்த்தவர்கள், இங்கு அம்மன் சிலை, பாம்பு சிலை புதையலாக இருக்கிறது. ஐம்பொன் சிலைகளாக இருக்க வாய்ப்புள்ளது.
இதனை தோண்டி எடுத்து பூஜை செய்தால், உங்க வீட்டில் உள்ள பிரச்னைகள் எல்லாம் தீரும். அதோடு, வீட்டில் செல்வம் பெருகும் என்றும் கூறியிருக்கின்றனர். நாங்களே அந்தப் புதையலை எடுத்துக் கொடுக்கிறோம், ஆனால், அதற்கு 1 லட்சம் எங்களுக்கு தட்சணை கொடுக்க வேண்டும் என்று கூறி முதல் தவணையாக தம்பதியிடம் ரூ.50ஆயிரத்தை வாங்கிச் சென்றிருக்கின்றனர்.
தொடர்ந்து, சில தினங்கள் கழித்து வந்தவர்கள், முத்துலட்சுமி வீட்டின் ஒரு அறைக்குச் சென்று மண்வெட்டி, கடப்பாரை கொண்டு தோண்டியுள்ளனர். அப்போது முத்துலட்சுமி மற்றும் சரவணனின் கவனத்தை திசை திருப்பி, 3 பேரும் தாங்கள் கொண்டு கொண்டு வந்திருந்த அரை அடி துவாரபாலகர் சிலை ஒன்று, 8செ.மீ அம்மன் சிலை, 14 சென்டி மீட்டர் நீளமுள்ள பாம்பு சிலை, 6 அம்மன் காசுகள் ஆகியவற்றை அந்த குழிக்குள் போட்டு, குழிக்குள் இருந்து தோண்டி எடுத்ததாக தம்பதியினரை நம்ப வைத்தனர்.
அவர்கள் கொண்டு வந்தது அனைத்தும் பித்தளை சிலை. ஆனால், அனைத்தும் ஐம்பொன் சிலைகள் என்று கூறியவர்கள், யாருக்கும் தெரியாமல் வீட்டின் உள்ளே நெல்மணிக்குள் வைத்து இதற்கு பூஜை செய்து வாருங்கள் நல்லதே நடக்கும் ஐம்பொன் சிலை, தங்க சிலையாக மாறும் அதிசயம் கூட நடக்கும் என்று கூறிவிட்டு ரூ.30ஆயிரத்தை இரண்டாம் தவணையாக வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

இதை உண்மை என்று நம்பிய தம்பதியினரும், அந்த சிலைக்குப் பூஜை செய்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில், எந்த மாற்றமும் தெரியாததால், நகை செய்யும் ஆசாரியிடம் சிலையை இவர்கள் காண்பித்த போது தான், இது பித்தளை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சரவணன் மண்டையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விசாரணையில், சரவணன் - முத்துலெட்சுமி தம்பதியினரிடம் 3 பேரும் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பூசாரிகள் 3பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த செல்போன், ரொக்கப்பணம், பித்தளை சிலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பூசாரிகள் வேறு யாரையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/nGP8jsC
via
