பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட விவகாரம் - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர், வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது,கொத்தனார், சித்தாள் உள்பட வேலை பார்த்தவர்களுக்கு அறந்தாங்கியில் இருக்கும் ஏ1 பிரியாணி சென்டர் கடையிலிருந்து சுமார் 30 பிரியாணி பொட்டலங்களை வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். பிரியாணியை சிலர் அங்கேயே சாப்பிட்டிருக்கிறார்கள் பலரும் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று, மாலை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டிருக்கின்றனர்

இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட தொழிலாளர்கள், அவரின் குடும்பத்தினர் பலரும், அடுத்தடுத்து மயங்கியதோடு, சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து, அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். பிரியாணி சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக, அடுத்தடுத்து அரசு மருத்துவமனையில் சுமார் 41பேர் வரையிலும், அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில், 15 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். 26 பேர் வரையிலும் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிரியாணிக் கடைக்குச் சென்று உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததோடு, உணவுப் பாதுகாப்புத்துறையின் நெறிமுறைகளைப் பின்பற்றாததால், அந்தக் கடைக்குச் சீல் வைத்தனர்.

தொடர்ந்து, பிரியாணியின் மாதிரிகளை சேகரித்து கடந்த மே 5-ம் தேதி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், பிரியாணி சாப்பிட்டவர்களின் மலத்தின் மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரியாணி மாதிரி ஆய்வின் முடிவில், "ஸ்டப்லோ காக்கஸ் ஆரியஸ்" என்ற பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், மலம் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் எந்த பாக்டீரியாவும் கண்டறியப்படவில்லை. தற்போது, கிடைத்துள்ள ஆய்வின் முடிவை வைத்து டி.ஆர்.ஓ தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு உணவுப் பாதுகாப்புத்துறை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``மைக்ரோ பயாலஜி டெஸ்டில் பிரியாணியில் பாக்டீரியா இருப்பதாக வந்துள்ளது. அதே நேரம் மனித மலத்தின் மாதிரியில் எதுவும் கண்டறியப்படவில்லை.

இருவேறு முடிவுகள் சற்றே குழப்பத்தைத் தான் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் நாம், அடுத்தநாள் தான் மாதிரியை எடுத்து அனுப்பி வைத்தோம். எனவே இந்த விஷயத்தில் அனைத்தையும் ஆராய்ந்து டி.ஆர்.ஓ தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அந்த ஹோட்டலில் பிரியாணி தயாரிக்க வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பிரியாணி சம்பவத்தைத் தொடர்ந்து, அறந்தாங்கியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனை நடத்தி வருகிறோம்" என்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் மலம் பகுப்பாய்வு பரிசோதனையில் பாக்டீரியாக்கள் கண்டறியப்படாதது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, "பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆண்டிபயாட்டிக் மருந்துகள் செலுத்தப்ப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டதால் பாக்டீரியா வளர்ச்சி தெரியாமல் போய் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/th5yCEq
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*