"மதுரைக்காரன் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...!" - மிஷ்கின்.

0

"இப்போது நான் சென்னைக்காரன் இல்லை, சினிமாக்காரன் இல்லை மதுரைக்காரன்" என்று மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலகலப்பாக பேசினார்.

நூல் வெளியீட்டின்போது

எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் விகடனில் எழுதிய `தூங்கா நகர நினைவுகள்' நூல் வெளியீட்டு விழா மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடந்தது.

எழுத்தாளரும் இயக்குனருமான பாரதி கிருஷ்ணகுமார் நூலை வெளியிட இயக்குநர் மிஷ்கின் நூலை பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் எழுத்தாளர்கள் விஜய் ஆனந்த், ஷாஜகான், பேராசிரியர் பிரபாகர், சுந்தர் காளி, ஆகியோர் நூல் குறித்தும் மதுரை குறித்தும் சிறப்பாகப் பேசினார்கள்.

மிஷ்கின்

"ஊர் வரலாறு சொல்லும் நூல்கள் தமிழகத்தில் குறைவு. சூளூர் வரலாறு என்ற நூல் முக்கியமானது. சுசீந்திரம், விருத்தாச்சலம், சிதம்பரம் கோயில்களின் வரலாற்றுடன் ஊர் வரலாறு சொல்லும் நூல்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் மதுரையின் வரலாற்றை விரிவாக சொல்லும் `தூங்க நகர நினைவுகள்' முக்கியமான நூல்" என்றார் சுந்தர் காளி.

"இரவு முழுவதும் உணவு தரும் நகரம் மதுரை மட்டும்தான். நள்ளிரவிலும் கதையை, நாடகத்தை, சினிமாவை பார்த்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். கலையை வளர்க்கும் ரசிகர்கள் வாழும் ஊர். தமிழ்த் திரைப்படம் வெற்றியா, தோல்வியா என்பதை படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தெரிவித்துவிடுவான் மதுரை ரசிகன். ஒரு காலத்தில் திண்ணை இல்லாத வீடே மதுரையில் கிடையாது. வீட்டுக்கு வருகின்றவர்களை சாப்பிடுங்க என்று சொல்லும் வழக்கம் மதுரையில் மட்டும்தான் உண்டு. இங்கு எல்லா கருத்துக்களையும் வைக்க முடியும். `கடவுள் ரட்சிக்கிறார்' என்று நோட்டீஸ் கொடுப்பவனும், `கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என்று நோட்டீஸ் கொடுப்பவனும் ஒன்றாகக் கடையில் டீ குடிப்பார்கள்.

ஓலைச்சுவடிகளை எழுத எழுத்தாணிகளைச் செய்து கொடுத்தவர்கள் இங்கு வசித்ததால் உலகத்திலயே அவர்களை மதிக்கும் வகையில் எழுத்தாணிக்காரர் தெரு மதுரையில் உள்ளது. காலனி ஆதிக்கம் மதுரையின் தொன்மையை அழித்தது. தற்போது மதுரை நகரம் மாறிக்கொண்டிருந்தாலும் நான் சிறுவயதில் அனுபவித்த மதுரையை நான் சுவாசிக்கிறேன். என் அப்பா, அம்மாவை தீயிட்ட தத்தனேரி சுடுகாட்டு புகை மனத்தையும், நான் பிறந்த காந்தி பொட்டல் மருத்துவமனை மணத்தையும் ஒரே சேர எனக்குள் நிரப்பிக்கொள்கிறேன். மதுரையை ஆண்டாள், திருமங்கையாழ்வார், மாங்குடி மருதனார் என பலரும் பாடியுள்ளார்கள். அதன் நீட்சியாக அ.முத்துகிருஷ்ணனும் தற்போது பாடியுள்ளார்." என்றார்.

மிஷ்கின், "சித்திரம் பேசுதடி படம் எடுத்தபிறகு மதுரை வந்திருந்த நான் சாலையோரமாக நின்றுகொண்டிருந்தபோது, என்னைக் கண்டுகொண்ட ஒருவர், `இனி ஒழுங்கா படம் எடு' எனச் சொல்லிவிட்டுச் சென்றார். என்னுடைய முதல் ரசிகர் மதுரைக்காரர்தான்.

நூல் வெளியீட்டு விழா

பொதுவாக நான் சென்னைக்காரனாக வாழ்ந்தாலும், சிலர் எந்த ஊர் என்று கேட்பார்கள் அதன் மூலம் என் ஜாதியை தெரிந்துகொள்ளத்தான். நான், `யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என்பேன். கனியன் பூங்குன்றனாரின் கருத்து எனக்கும் மிகவும் பிடிக்கும் அதனால்தான் அவர் பெயரை என் பட கேரக்டருக்கு வைத்தேன்.பிறந்தது காரைக்குடி, படித்தது திருப்பத்தூர் வளர்ந்தது திண்டுக்லல்லாக இருந்தாலும் மதுரைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனக்கு அதிகமான நண்பர்கள் மதுரையில்தான் இருக்கிறார்கள். நூலைப் பற்றி நிறைய பேசி விட்டார்கள். அதற்கு வெளியே நான் பேசுகிறேன்.

மதுரையில் கீழடி, கீழவளவு சமணர் படுக்கைகளை சுற்றிப் பார்த்தபோதே மனம் நிறைந்துவிட்டது. மதுரையில் இரவு 1 மணிக்கு ஐஸ்கிரீம் தேடி அலைந்திருக்கிறேன். ஆனால் அருமையான பருத்திப்பால் சுவைக்கக் கிடைத்தது.தாது வருட பஞ்சத்தின்போது தன் சொத்து நகைகளை விற்று மக்களுக்கு உணவளித்த குஞ்சரத்தம்மாள் வைத்த உலையின் புகை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் தாண்டி பறந்தது என்று தூங்காநகர் புத்தகத்தில் அ.முத்துக்கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அறம் கடவுளைத்தாண்டி உயரமானது. குஞ்சாரத்தாம்மாள் கதையை படமாக எடுத்தால் ஆஸ்கார் வாங்கலாம். உணவளிக்கும், உதவி செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் மதுரைப் பெண்ணாக பார்க்கிறேன்.

மிஷ்கின்

ஒரு வீட்டில் 100 நல்ல புத்தகங்கள் இல்லை என்றால் அது வீடே இல்லை. இப்போது நான் சென்னைக்காரன் இல்லை, சினிமாக்காரன் இல்லை மதுரைக்காரன் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நம்முடைய குழந்தைகளுக்கு அறம் சார்ந்த வரலாறுகளைக் கடத்தவேண்டும். அதற்காக வீட்டில் புத்தகம் வாங்கி வைப்பது முக்கியமானது. வைகை நதியை எப்படி மறக்க முடியாதோ அதைப் போல் பாரதிராஜாவையும், இளையராஜாவையும் மறக்க முடியாது. மதுரை பின்புலத்திலிருந்து வந்த பாரதிராஜா, இளையராஜா, பாலா, வடிவேலு ஆகியோரை மிகவும் பிடிக்கும். இளையராஜா கருத்து குறித்து ஆதரவும் தெரிவிக்கவில்லை, எதிர்க்கவும் இல்லை. நான் நானாக இருக்கிறேன். வைகைப் புயல் வடிவேலு போல் உடல் மொழி யாரும் செய்யவில்லை என நான் சொல்வேன்.நல்ல படங்கள் செய்வதால் திரைப்படத் துறையில் ஜெயிக்க முடியாது. அதனால்தான் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை." என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/0vpSnIb
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*