கடலூர்: கழுத்தை துளைத்துச் சென்ற தோட்டா - மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட காவலர்

0

கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த சேத்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, ஆயுதப் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது 10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைப்பெற்று வருகின்றன. அதன்படி சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விடைத்தாள்கள், வீனஸ் மெட்ரிக்குலேஷன் என்ற தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. விடைத்தாளின் பாதுகாப்புக்காக அவை வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட காவலர் பெரியசாமி

அதன்படி நேற்று 17-ம் தேதி பெரியசாமியுடன் ராஜ்குமார் என்ற காவலரும் பணியில் இருந்திருக்கிறார். நேற்றிரவு வழக்கம்போல இருவரும் உணவருந்திவிட்டு தூங்க சென்றிருக்கின்றனர். அதையடுத்து அதிகாலை 5 மணிக்கு அறையைவிட்டு வெளியே வந்த பெரியசாமி, அங்கிருந்த பாதுகாப்பு துப்பாக்கியை எடுத்து தனது கழுத்தில் வைத்து ட்ரிக்கரை அழுத்தியிருக்கிறார். கழுத்தை துளைத்துக் கொண்டு சென்ற அந்த தோட்டாவால் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த பெரியசாமி, சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார்.

அந்த சத்தம் கேட்டு எழுந்த மற்றொரு காவலர் ராஜ்குமார், உடனே போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் அங்கு உடனே விரைந்த டி.எஸ்.பி ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீஸார், பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது செல்போனை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக பெரியசாமி

இது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, ``பெரியசாமியின் அக்கா ஒன்றரை வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். பெரியசாமியின் உறவினர்கள் அவருக்கு பெண் பார்த்து ஜூன் மாதம் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கின்றனர். ஆனால் அந்த திருமணத்தில் பெரியசாமியின் அம்மாவுக்கு விருப்பமில்லை. அதனால் அம்மாவுக்கும் பையனுக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

நேற்று இரவு பணிக்கு அவர் வருவதற்கு முன்பும், தனது அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறார். அப்போது அக்காவை மாதிரி நானும் போய் சேர்ந்துடறேன்னு சொல்லிட்டு வந்துதான் தற்கொலை செஞ்சிக்கிட்டார். இதுதவிர அவருக்கு உடல்ரீதியாகவும் சில பாதிப்பு இருக்கு. முழுமையான விசாரணை முடிவில்தான் உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.

கடலூர் மாவட்ட எஸ்.பி சக்திகணேசனை தொடர்புகொண்டபோது., “அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்திருக்கிறது. அந்த திருமணத்திற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். அந்த விஷயத்தில் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகத்தான் இன்று காலை 5 மணிக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/AsUox0j
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*