திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகம் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், இப்போது தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் பேட்டி அளித்துவருகிறார். கடந்த 7-ம் தேதி தொடங்கி தினமும் புதுப்புதுத் தகவலை வெளியிட்டுவருகிறார். ஏற்கெனவே முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு உண்டு எனக் கூறினார். அதன் பின்னர் தனது 164 பக்க வாக்குமூலத்தை வாபஸ் பெற வேண்டும் என நண்பரான ஷாஜ் கிரண் மூலம் பினராயி விஜயன் மிரட்டல் விடுத்ததாகக் கூறினார். மேலும் அது சம்பந்தமான ஆடியோ ஒன்றையும் ஸ்வப்னா சுரேஷ் நேற்று வெளியிட்டார். அந்த ஆடியோவில் பிலீவர்ஸ் சர்ச் மூலம் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் ஃபண்டுகளை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த ஆடியோ விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பிலீவர்ஸ் சர்ச் சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோ எடிட் செய்யப்பட்டது எனக் கூறிய ஷாஜ் கிரண், ஸ்வப்னாவின் தனிப்பட்ட வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. இது பற்றிச் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், "ஷாஜ் கிரண் செய்தியாளர்கள் முன்னிலையில் எனது தனிப்பட்ட வீடியோ குறித்துப் பேசினார்.
அந்தரங்க விஷயங்களைக் கூறித்தான் ஒரு பெண்மீது அதிக தாக்குதல் நடத்துகிறார்கள். எனது பாத்ரூமிலோ, பெட்ரூமிலோ, உடை மாற்றும் அறையிலோ ரகசிய கேமராவைத்து வீடியோ எடுத்தார்களா எனத் தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி வீடியோ இருக்கிறது என்றால், நீங்கள் நூறு சதவிகிதம் சரியானதுதானா என விசாரணை நடத்த வேண்டும். உங்களின் ஒரு சகோதரிக்கு இந்த நிலை வந்திருப்பதாக நினைக்க வேண்டும். உங்கள் சகோதரியாக நினைத்து என்னைப் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் உண்மை வெளியே வராது. இதையெல்லாம் பார்த்துத்தான் நான் சோர்ந்துபோயிருக்கிறேன்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/dIwSaTA
via
