85 வயதில் தொழிலதிபராகி, முதல் கார் வாங்கிய முதியவர்.. டிரெண்டாகும் செளத்ரி..! | An 85 years old Gujarati entrepreneur buy his first car
தொழிலதிபர் ஆகவேண்டும், கார் வாங்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்தாலும் அந்த கனவு நனவாகும் நாள் எது என்பது யாருக்குமே தெரியாது.
தொழிலதிபர் மற்றும் கார் கனவை பலர் இளவயதிலும் சிலர் நடுத்தர வயதிலும் நனவாக்கி இருப்பார்கள். ஆனால் 85 வயதில் தொழிலதிபராகிய ஒருவர் இருக்கின்றார் தெரியுமா?

85 வயதில் தொழிலதிபராகி முதல் காரை வாங்கி உள்ள குஜராத்தை சேர்ந்த ஒரு ஹீரோ குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நானஞ்சி என்று அழைக்கப்படும் தொழிலதிபர் செளத்ரி தனது 85வது வயதில் முதல் காரை வாங்கியது எப்படி என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் விவரித்துள்ளார். அவரது வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் 18.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செளத்ரி 50 ஆண்டுகள் கடினமாக உழைத்து பிறகு ஓய்வு பெற்றார். நிறுவனத்தில் இருந்து தான் ஓய்வு பெற்றாரே தவிர அவரது உடலும் மனமும் ஓய்வு பெறவில்லை. ஓய்வுக்கு பின் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
அவர் தொழிலதிபர் ஆனதற்கு அவரது மகளும் ஒரு காரணம். செளத்ரியின் மகள் முடி கொட்டி வருவதன் காரணமாக மிகுந்த வருத்தத்துடன் இருப்பதை அறிந்தார். மகளின் வருத்தத்தைப் போக்கும் வகையில் முடி கொட்டுவதை நிறுத்தும் தலைமுடி எண்ணெய் தயாரிக்க அவர் முடிவு செய்தார்.
50க்கும் மேற்பட்ட மூலிகைகளை ஆராய்ச்சி செய்து ஒரு எண்ணெய்யை உருவாக்கினார். அந்த மூலிகை எண்ணெய் அவர் தனது மகளுக்குக் கொடுத்த நிலையில் அந்த எண்ணெய் அவரது மகளின் முடி உதிர்வு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது.
இதனை அடுத்து தனது மகளுக்கு கிடைத்த இந்த பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த மூலிகை எண்ணெய்யை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதற்காக அவர் அவிமீ ஹெர்பலின் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கி ஒரு வீடியோ பதிவு செய்தார்.
அந்த வீடியோவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. பலர் அவரது தயாரிப்பை புகழ்ந்தாலும் ஒருசிலர் அவரை பொய்யன் என்றும் மோசடி செய்பவர் என்றும் விமர்சனம் செய்தனர். ஆனால் அவரது எண்ணெய்யை பயன்படுத்தியவர்கள் கொடுத்த பாசிடிவ் விமர்சனம் காரணமாக அவர் வெகு விரைவில் தனது வர்த்தகத்தை பெருக்கி வெற்றிகரமான தொழிலதிபர் ஆனார். தனது தொழிலில் கிடைத்த லாபத்தில் சொந்த கார் வாங்கியதாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.
ஆயுர்வேத மூலிகையை பயன்படுத்தி தயாரிக்கும் எண்ணெய் மூலம் தலை முடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டேன். அதன் பலனை அனைவரும் அனுபவிக்கும் வகையில் தான் இந்த நிறுவனத்தை தொடங்கினேன் என்று செளத்ரி கூறியுள்ளார்.
அவர் தனது நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றியதற்கு நான்கு காரணங்களை குறிப்பிடுகிறார். பார்வை மற்றும் பணி என்பது முதல் இரண்டு காரணங்கள் ஆகும். ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் தலைமுடியை மீண்டும் வளர உதவுவதற்கு நாங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட பணியை கொண்டிருந்தோம் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு காரணங்கள் நம்பிக்கை மற்றும் குழுப்பணி. ஒருசிலர் எங்களை 'மோசடி' என்று பகிரங்கமாக அழைத்தபோது, எங்களை காப்பாற்றியது எங்கள் தயாரிப்பின் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை தான் என்று கூறினார். அதே போல் குழுப்பணி. இந்த முயற்சியில் எனது பங்கு மட்டுமின்றி எனது மனைவி, மகள் என குழுப்பணியும் என்னை ஊக்கப்படுத்தியது என்று செளத்ரி கூறியுள்ளார்.
