மதுரை எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். கடந்த 5-ம் தேதி வெற்றிவேலை காணவில்லை என தாய் ராணி, அவினியாபுரத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் 15 நாள்களுக்கு முன்பு வெற்றிவேலின் நண்பர்கள் இரண்டு பேருடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள வெள்ளாளங்கோட்டைக்குச் சென்றதையும் கூறினார். இதற்கிடையில் வெள்ளாளங்கோட்டை கிராமத்தின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் சடலம் மிதந்துள்ளது. இது குறித்து அப்பகுதியினர், கயத்தார் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர்.
இதனையடுத்து விசாரணையில், அது காணாமல்போன மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவனியபுரம் போலீஸார், வெள்ளாளங்கோட்டையைச் சேர்ந்தவரும் தற்போது மதுரையில் வசித்து வரும் அஜய் முருகன், மணிகண்டன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெற்றிவேலைக் கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
போலீஸாரின் விசாரணையில் அஜய்முருகன், ``நானும் வெற்றிவேலும் நண்பர்கள்தான். என்னோட தங்கச்சி ஒருத்தனை காதலிச்சிருக்கா. அவங்க ரெண்டு பேரோட காதலுக்கு எனக்குத் தெரியாம வெற்றிவேல் உதவி செஞ்சிருக்கான். இது எனக்கு ஒருநாள் தெரிய வந்துச்சு. இது சம்மந்தமா வெற்றிவேலிடம் கேட்டேன். காதலுக்கு உதவி செஞ்சா என்ன தப்புன்னு எங்கிட்டயே திமிராப் பேசுனான். எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்துச்சு. அவனைக் கண்டிச்சேன். ஆனாலும், அவன் கேட்கலை. அவனைக் கொலை செஞ்சுடலான்னு முடிவெடுத்தேன்.
சமாதானம் பேசுறது போலப் பேசி, என்னோட இன்னொரு நண்பனான மணிகண்டனுடன் சேர்ந்து வெள்ளாளங்கோட்டை கிராமத்துக்கு வெற்றிவேலை கூட்டிக்கிட்டுப் போனேன். எங்க கிராமத்துல உள்ள ஒரு பாழடைஞ்ச கிணத்துப் பக்கம் வெற்றிவேலைக் கூட்டிக்கிட்டு போயி அரிவாளால வெட்டிக் கொலை செஞ்சோம். பிறகு அவனோட உடலை அந்தக் கிணத்துல தூக்கி வீசிட்டு மதுரைக்கு வந்துட்டோம்” எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கிணற்றிலிருந்து வெற்றிவேலின் சடலம் மீட்கப்பட்டது. சகோதரியின் காதலுக்கு உதவியதால் நண்பனையே கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/x4nPY2X
via
