தமிழகத்தையே அதிர வைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை என பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது முன் விரோதத்தில் கச்சநத்ததுக்குள் புகுந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த கும்பல், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சேதப்படுத்தியும், அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர்.
பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மதுரையில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். சிவகங்கை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. இடையில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் உயிரிழந்தனர். 3 சிறுவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில், கடந்த 1-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி முத்துக்குமரன்,
தண்டனை விவரத்தை 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்து, பின்பு 5 -ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்தநிலையில் இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் ஆயுள்தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/wfSeLsD
via
