தமிழ்நாடு-கேரளா எல்லையான அச்சன்கோவிலிலிருந்து புனலூர் செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அதனால் இந்த வழியைப் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்துவதில்லை. இந்த வழியாகச் செல்லும் கனரக வாகனங்களை யானைகள் அவ்வப்போது வழிமறிப்பது வழக்கம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வழியாக பைக்கில் சென்ற இருவரை காட்டு யானை மறித்திருக்கிறது. ஆனால், பைக்கில் வந்தவர்கள் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த யானை அவர்களைத் தாக்கியிருக்கிறது. நல்வாய்ப்பாக இருவரும் யானையின் பிடியில் சிக்காமல் தப்பிவிட்டனர். அதனால் அந்த வழியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினார்கள்.
இந்த நிலையில், அச்சன்கோவிலிலிருந்து புனலூர் நோக்கிச் செல்லும் துரைப்பாலம் சாலையில் மீண்டும் ஒற்றை யானை நடமாட்டம் இருந்திருக்கிறது. அத்துடன், அந்த வழியாகச் செல்லும் வாகனங்களையும் ஒற்றை யானை மறித்து அச்சுறுத்தி வந்தது. அந்த வழியாகச் சென்ற லாரியை ஒற்றை யானை மறித்ததால் அதிர்ச்சியடைந்த டிரைவர் சத்தமிட்டதால் சில நிமிடங்களில் யானை அங்கிருந்து சென்றிருக்கிறது.
பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் அந்த யானை சாலைக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஹாரனை ஒலித்திருக்கின்றனர். அதனால் எரிச்சலடைந்த யானை மிரட்டும் வகையில் அவர்களை நோக்கி வந்திருக்கிறது. அதனால் பொதுமக்கள் அச்சத்துடன் கூச்சலிட்டதால் யானை அங்கிருந்து விலகிச் சென்றிருக்கிறது. இதையெல்லாம் அங்கிருந்தவர்கள் வீடியோவாக தங்கள் செல்போன்களில் பதிவுசெய்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில், அச்சன்கோவில்-புனலூர் சாலையின் வனப்பகுதியில் சாலையோரம் ஒருவர் யானை மிதித்து உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. உடனடியாக வனத்துறையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
உயிரிழந்து கிடந்தவரை துரைப்பாலம் சாலையில் சிலர் பார்த்திருக்கின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக எனக் கூறப்படுகிறது. அதனால் யானையின் அருகில் சென்றிருக்கலாம் என்றும், அதனால் அவரை ஒற்றை யானை மிதித்துக் கொன்றிருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டினால் மட்டுமே தங்கலால் நிம்மதியாகக் குடியிருக்க முடியும் என அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை வனத்துறையினர் சமாதானப்படுத்தினார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/MHCvxNj
via
