நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவானவரை 9 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்துள்ளது காவல்துறை.
மதுரையில் அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசையைத் தூண்டி கோடிக்கணக்கில் வசூல் செய்து பல நிறுவனங்கள் பணத்துடன் தலைமறைவாகின. பாதிக்கப்பட்டவர்களின் புகாருக்குப்பின் சில நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த மோசடி பட்டியலிலுள்ள போலி நிறுவனங்களில் ஒன்றுதான் பி.ஜி.மார்க்கெட்டிங்.
2013-ல் தணிகைமலை என்பவரால் தொடங்கப்பட்ட இந்த போலி நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி, பல பேரிடம் பணம் டெபாசிட் வாங்கி குவித்தது. பின்னர் அதை திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது.
அதில் ரூ.3,70,00,000 முதலீடு செய்த 170 பேரின் புகாரைத் தொடர்ந்து தணிகைமலை மீது பொருளாதர குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அப்போது தலைமறைவான தணிகைமலையைக் காவல் துறையால் பிடிக்க முடியவில்லை.
வழக்கில் ஆஜராகாத தணிகைமலைக்கு நீதிமன்றத்தால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தணிகைமலையின் ஆதார் பயன்பாட்டை இன்டர்நெட் டெக்னாலஜியைப் பயன்படுத்தி பொருளாதரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி பாண்டிச்செல்வம் தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதில் அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்றபோது சென்னைக்கு அவர் தப்பியோடிவிட்டார். பிறகு சென்னை திருமுல்லைவாயிலில் தங்கியிருந்த தணிகைமலையை எஸ்.ஐ கோபாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் ஆறுமுகம் ஆகியோர் கடந்த 31-ம் தேதி கைது செய்து மதுரைக்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
9 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து தற்போது சிறைக்கு சென்றிருக்கும் தணிகைமலையிடமிருந்து தங்கள் பணம் மீட்கப்படுமா என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/YxQ75fs
via
