கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்தார். காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார் என்று தகவல் வெளியானது. இதனிடையே சிலிண்டர் வெடித்ததில் ஆணி மற்றும் கோலி குண்டுகள் சிதறி கிடந்தன.
இந்த சம்பவம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்ததாலும், அடுத்த நாள் தீபாவளி பண்டிகை என்பதாலும் இது சதி செயலாக இருக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது.
டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் உடனடியாக கோவை விரைந்தனர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜமேசா முபின் என்று தெரியவந்தது. ஜமேசா முபின் வீட்டில் போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் பல்வேறு வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஜமேசா முபின் வீட்டில் இருந்து அவர் உள்பட 5 பேர் மர்ம பொருள்களை தூக்கிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின.
இதுகுறித்து உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் ( 23), ஜி.எம். நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபைரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளனர். அவர்களின் வீடுகளிலும் போலீஸ் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார். நவாப்கான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையின் முக்கியப் பகுதிகளில் அதிவிரைவு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருவதால், விரைவில் என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/URvFE5O
via
