நெல்லை: வழக்கறிஞர் செம்மணி தாக்கப்பட்ட சம்பவம் - டி.ஜி.பி உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

0

நெல்லை மாவட்டம் மாறன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் செம்மணி என்ற ராஜரத்தினம். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்காக வாதாடி வந்தார். வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வந்த அவரை, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அவரின் வீட்டுக்குள் நுழைத்த போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர்.

வழக்கறிஞர் செம்மணி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பாத நிலையில், விசாரணை என்ற பெயரில் பணகுடி, கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் அவரின் கால்கள் உடைந்தன. ஆனாலும் அவரை போலீஸார் கட்டித் தொங்கவிட்டு கால் நகங்களைப் பிடுங்கி கொடூரமாக நடந்துள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, அப்போது நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அப்போதைய நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்தி குமார், வள்ளியூர் டி.எஸ்.பி குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் போராடினார்கள். அத்துடன், வழக்கறிஞர் செம்மணி இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் செம்மணி மீதான தாக்குதலுக்குக் காரணமான டி.எஸ்.பி குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், உதவி ஆய்வாளர்கள் பழனி ,விமல்குமார் ,முகம்மதுசமீர் உள்ளிட்ட 8 போலீஸார் மீது 11 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனாலும் அவர்களைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வழக்கறிஞர் செம்மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்னை அடித்து துன்புறுத்திய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதிலும் உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

வீல் சேரில் வந்த செம்மணி

வழக்கு நிலுவையில் இருந்தபோது கடந்த 2020 டிசம்பர் 3-ம் தேதி வழக்கறிஞர் செம்மணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆனாலும், தன் கணவனுக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி கோரி இந்த வழக்கை அவரது மனைவி சரோஜா தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துவிட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். செம்மணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் வழக்கறிஞர் செம்மணி கைது செய்யப்பட்டுள்ளார். அதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், வழக்கறிஞர் செம்மணி இந்த வழக்கைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகியும் அதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை, அதனால் உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிகாரத்தின்படி காவல்துறைத் தலைவர், நெல்லை மாவட்டத்தில் அப்போது பணியில் இருந்த எஸ்.பி உள்ளிட்டோர் மீது நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்வதாக அறிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/pmzwKli
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*