``தகாத முறையில் வெறுக்கத்தக்க செயல்களை செய்தார்” - மாணவி கண்ணீர்; ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

0

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் பாடப்பிரிவு ஆசிரியராக பணியாற்றிவருபவர் முருகன். இவர், தன்னிடம் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் முறையிட்டிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை அழைத்துக்கொண்டு ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலத்திற்கு சென்று புகாரளித்தனர்.

மாணவி கொடுத்த புகார் மனுவில், ‘‘ஆசிரியர் முருகன் வகுப்பில் பாடம் எடுக்கும்போது என்னைப் பார்த்து கெட்ட எண்ணத்தில் கண் அடிக்கிறார். கிண்டல் கேலியாக பேசுகிறார். ‘வாடி, போடி’ என அழைகிறார். சமீபத்தில் ஒருநாள் அப்படி என்னை அழைத்து ‘உன்னை மொத்தமாக அனுபவிக்கப் போகிறேன்’ என ஆபாசமாக பேசினார். என்னுடன் படிக்கும் சக தோழிகளிடமும் கையைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

அதுமட்டுமின்றி, தகாத முறையில் வெறுக்கத்தகச் செயல்களில் இடிக்கிறார்; தொடுகிறார். நவம்பர் 25-ம் தேதியன்று காலை 9.30 மணியளவில், நான் வகுப்பறையில் இருந்த சமயத்தில், ஆசிரியர் முருகன் மதுபோதையில் அங்கு வந்தார். என்னைப் பார்த்து, ‘வாடி வெளியே’ என கூப்பிட்டார். இதுபோல அவர் கொடுக்கும் பல இன்னல்களால் மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. என் வகுப்பிலிருக்கும் மற்ற மாணவிகளிடம் விசாரித்துப் பாருங்கள். உண்மை தெரியவரும்’’ என்று கூறியிருந்தார்.

பாலியல் தொல்லை

இதுதொடர்பாக உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அரக்கோணம் மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஆசிரியர் முருகன்மீது தவறு இருப்பதை உறுதிசெய்த பின்னர், அவர்மீது ‘போக்சோ’ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த ஆசிரியர் முருகன் கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டார். அவர் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம், சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/LcytZVo
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*