திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள ஒரவந்தவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, வயது 40. இவரின் மனைவி வள்ளி, வயது 37. இந்த தம்பதிக்கு 15 வயதில் திரிஷா, 14 வயதில் மோனிஷா, 9 வயதில் பூமிகா, 6 வயதில் சிவசக்தி என மகள்களும், 4 வயதில் தனுஷ் என்ற ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில், குடும்பத் தகராறில் ஆத்திரத்திலிருந்த பழனி நள்ளிரவில் மனைவி மற்றும் 5 குழந்தைகளையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பூமிகா என்ற ஒரே மகள் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்தார். அனைவரையும் வெட்டிய பழனி, வீட்டுக்குள்ளேயே தூக்குப்போட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார். இவர்களின் வீட்டுக்குள் இருந்து கேட்ட மரண ஓலத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து பார்த்திருக்கிறார்கள்.
அப்போது, பழனி தூக்கிலும் மற்றவர்கள் சடலங்களாகவும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். இதையடுத்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுமி பூமிகாவை மட்டும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், அந்த சிறுமியும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார், வீட்டுக்குள் கிடந்த பழனி உட்பட 6 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் மற்றும் பின்னணிக் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே குடும்பத்தில் மனைவி மற்றும் 4 குழந்தைகளை வெட்டிக்கொன்று விட்டு விவசாயியும் தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம், திருவண்ணாமலை மாவட்டத்தையே உலுக்கியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/u12DaAR
via
