சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் காரைக்குடியில் உள்ள தனியார் காஸ் சிலிண்டர் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தார். இவர் வழக்கம் போல் இன்று இருசக்கர வாகனத்தில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு, அவற்றை டெலிவரி செய்வதற்காக காரைக்குடி, தந்தை பெரியார் நகர்ப் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
மாண்டஸ் புயல் எதிரொலியாக அந்தப் பகுதியில், இன்று வழக்கத்தைவிடவும் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்திருக்கிறது. அப்போது, அடுக்குமாடிக் குடியிருப்பின் 3-வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி திடீரென பெயர்ந்து, அந்தப் பகுதியை கிராஸ் செய்ய முயன்ற பழனியப்பனின் கழுத்தில் விழுந்தது. இதில், பழனியப்பனின் கழுத்தில் கண்ணாடி வெட்டியதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பழனியப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துபோய்விட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து காரைக்குடி போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னர் ஏற்கெனவே ஒருமுறை அதே அடுக்குமாடிக் குடியிருப்பலிருந்து கண்ணாடி பெயர்ந்து விழுந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுபோன்று பாதிப்பை ஏற்படுத்தும் ஜன்னல் கண்ணாடிகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இருப்பினும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே சோகத்தை ஏற்படுத்தியது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Wa6NKqY
via
