திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ், வயது 45. இவர் ஆரணி காந்தி நகரிலிருக்கும் சவுண்டு சர்வீசஸ் கடையில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அருள்தாஸுக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவிக்கும் இடையே திருமணம் மீறிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 35 வயதான அந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், தயக்கமின்றி ஆண் நண்பரை தனது வீட்டிற்கே அடிக்கடி வரவழைத்து நெருக்கமாக இருந்திருக்கிறார் அந்தப் பெண். சில நாள்களிலேயே இந்த விவகாரம் மகனுக்குத் தெரியவர, தாயைக் கண்டித்தத்துடன் அருள்தாஸிடமும் ‘என் வீட்டிற்கு வராதீங்க; என் அம்மாக்கிட்ட பேசாதீங்க. எனக்குப் பிடிக்கலை’ என்று எச்சரித்திருக்கிறான். ஆனால், இருவரும் தொடர்ந்து உறவில் இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி, சிறுவன் வெளியில் சென்ற நிலையில், அங்குவந்த அருள்தாஸ் வழக்கம்போல, அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் திரும்பிவந்த சிறுவன் கடும் கோபமுற்று, வீட்டின் வெளியே கிடந்த கட்டையை எடுத்து அருள்தாஸை சரமாரியாக தாக்கியிருக்கிறான். அருள்தாஸ் மதுபோதையில் இருந்ததால் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியவில்லை. தலையிலும் தாக்கப்பட்டதால் சுருண்டு விழுந்தார். அங்கு வேடிக்கைப் பார்க்க திரண்ட மக்கள், ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர், அருள்தாஸ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுபற்றி, ஆரணி நகர போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதால், சிறுவன் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவனை கைதுசெய்து கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/F6sntTf
via
