"இப்பதான் சுதந்திரம் கெடச்ச மாதிரி இருக்கு!"- சமத்துவ பொங்கல் வைத்து நெகிழ்ந்த பட்டியல் சமூக மக்கள்

0

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் கிராமத்தில், ஆதி திராவிடர் குடியிருப்பில் இருக்கும் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளனூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரண நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 27-ம் தேதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, `இங்குள்ள அய்யனார் கோயிலுக்குள் எங்களை நுழையவிடமாட்டார்கள், அதோடு இரட்டைக் குவளை முறை நிலவுகிறது' என பட்டியல் சமூக மக்கள் புகார் கூறினர்.

உடனே, பூட்டிக் கிடந்த கோயிலைத் திறந்து, கையோடு அவர்களைக் கூட்டிச் சென்று வழிபாடு செய்யவைத்து நெகிழவைத்தார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. இதையடுத்து, உடனே இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து சமூக மக்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், அய்யனார் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக சென்று வழிபட வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், நேற்றைய தினம் கிராமத்தில் இருக்கும் மூன்று சமூக மக்களும் ஒன்றாகச் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து அய்யனாரை வழிபட்டனர். முன்னதாக, பட்டியல் சமூக மக்கள் மாலை, பழங்கள் தட்டுகளுடன் கோயிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து, அனைத்து சமூக மக்களும் ஒன்றாக இணைந்து அய்யானரை தரிசினம் செய்தனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இது தொடர்பாகப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ``மனிதக்கழிவுகளை குடிநீர்த் தொட்டியில் கலந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு புதிய குடிநீர்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி துவங்கி 20 நாள்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இது பற்றி பேசிய பட்டியல் சமூக மக்கள், "நாடு சுதந்திரம் வாங்கி எத்தனையோ வருஷம் ஆச்சு. ஆனா, இப்பதான் நாங்க சுதந்திரம் கிடைச்சதா உணர்கிறோம். வரும் காலங்களிலும் எவ்வித தடையுமின்றி நாங்க அய்யனாரை தரிசிக்க வழிவகை செஞ்சா அதுவே போதும்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/GFm1snt
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*