கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல் நிலையத்திலிருந்து காவடி கட்டி வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச்செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவல் நிலையத்தில் காவடி கட்டக்கூடாது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததால் பா.ஜ.க-வினர் தக்கலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காவடிகட்ட அனுமதி அளிக்கப்பட்டது. காவடி ஊர்வலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, தி.மு.க அமைச்சர் மனோ தங்கராஜ் பாரம்பர்ய நிகழ்வை தடுக்க முயன்றதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில், குளச்சல் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், "பா.ஜ.க-வினர் இதை மாதிரி ஒரு கேவலமான அரசியல் நடத்துவதைவிட, நம்ம ஊர்ல சொல்லுறதுமாதிரி ஏதோ செய்து பிழைக்கலாம். இந்தச் சம்பவம் எங்க காதுக்கே வரல. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்த காவடிகட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். தி.மு.க என்றைக்கும் மக்களின் நம்பிக்கை மீது எந்த தாக்குதலும் நடத்தாது. அது எங்களுடைய வேலையே அல்ல. இன்றைக்கு இந்த புல்லுருவிகளுக்கு பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லை. பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் தவறுதலாக காவல் நிலையத்துக்குச் சென்று அத்துமீறி சில விஷயங்கள் செய்வதால் காவல்துறை ஒரு முடிவு செய்திருக்கிறது. அப்போது நான் சென்னையில் இருந்தேன். கடைசியாக என்னுடைய கவனத்துக்கு வந்ததால் நான் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, காவடிகட்டு நிகழ்ச்சியை சுமுகமாக நடத்த வைத்தோம்.
நானோ தி.மு.க-வைச் சேர்ந்த யாராவதோ காவடிகட்டை நடத்த வேண்டாம் என சொல்லியிருந்ததாக அவர்கள் நிரூபித்தால் நாங்கள் கூண்டோடு பொதுவாழ்க்கையை விட்டு போய்விடலாம். மக்கள் பிரச்னையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத பா.ஜ.க ஒரு எச்சில் அரசியலை இன்றைக்கு அரங்கேற்ற முயற்சிக்கிறது, இதை மக்கள் ஏற்றுக்கொள்ளவேமாட்டார்கள். காலங்காலமாக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பூஜையை நடத்தி காவடி எடுத்துச் செல்வார்கள்.
இந்த முறை பா.ஜ.க, இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் காவல் நிலையத்துக்குள் அனுமதி இல்லாமல் சென்று, நாங்களும் பூஜை பரிகாரங்களில் கலந்துகொள்வோம் என காவடி எடுக்க வந்திருக்கிறார்கள். இது காவலர்கள் பாரம்பர்யமாக செய்வது, அவர்கள் செய்யட்டும், வெளி ஆட்கள் உள்ளேபோய் சில விஷயங்களை செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என காவல் கண்காணிப்பாளர் சொல்லியிருப்பதாக நான் அறிந்தேன். காவடிகட்டை நடத்தக்கூடாது என காவல்துறை கண்காணிப்பாளர் சொல்லவில்லை. இதில் எனக்கோ, தி.மு.க நிர்வாகிகளுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.
கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இன்று பா.ஜ.க-வில் பெரிய தலைவர்களாக இருக்கிறார்கள். வளர்ச்சியை நோக்கி பல்வேறு முன்னேற்ற முன்னெடுப்புக்களை செய்துகொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் கிரிமினல்கள் எல்லாம் சேர்ந்து எங்கள்மீது போட்ட அபாண்டமான பழி இது" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/qjvaeg2
via
