
திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது காங்கேயம் நகராட்சி. இதன் ஆணையராக உள்ள வெங்கடேசன் தனது அலுவலகத்துக்கு நிர்வாண நிலையில் இருந்த அகோரிகளை அழைத்து வந்து பூஜை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நாம் விசாரிக்கையில், காங்கேயம் நகராட்சி ஆணையர் வெங்கடேசன் 2-ஆவது வார்டு பாஜக பொறுப்பாளர் அசோக், 2-ஆவது வார்டு திமுக பொறுப்பாளர் சரவணன் ஆகியோரும் நண்பர்கள். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்த காசி சீனு மற்றும் மற்றொரு அகோரியை அசோக்கும், சரவணனும் நகராட்சி அலுவலகத்துக்கு கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அழைத்து வந்துள்ளனர் என சொல்லப்படுகிறது. நகராட்சி அலுவலகத்துக்குள் இரண்டு அகோரிகள் நிர்வாணமாக வருவதைக் கண்ட பெண் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்தின் மேல் தளத்துக்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து, அந்த அகோரிகளை ஆணையரின் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று, சிறிய அளவிலான பூஜை நடத்தி, அவரிடம் ஆணையர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், அசோக், சரவணன், அவரது தந்தை, ஆணையரின் ஓட்டுநர் ஆகியோர் ஆசி பெற்றுள்ளனர். நகராட்சி அலுவலகத்தை விட்டு அகோரிகள் சென்ற பின்னர்தான் பெண் ஊழியர்கள் மேல் தளத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளனர்.
20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், ஆணையரின் அனுமதியுடன் நிர்வாண நிலையில் இருந்த அகோரிகளை அழைத்து பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் பெற ஆணையர் வெங்கடேசனை அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் நமது அழைப்பை அவர் எடுக்கவில்லை. இதுகுறித்து காங்கேயம் நகராட்சித் தலைவர் சூர்யபிரகாஷ் கூறுகையில், " ஆணையர் வெங்கடேசன் சொந்த காரணங்களுக்காக விடுமுறையில் உள்ளார். அவர் நகராட்சி அலுவலகத்துக்குள் அகோரிகளை கூட்டிவந்ததாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அவர் சாமியார்களைதான் கூட்டி வந்து ஆசி பெற்றார். அவர்கள் நிர்வாணமாக வந்தது குறித்து கேட்கிறீர்கள்.. நகராட்சி அலுவலகத்துக்குள் சாமியார்கள் நிர்வாணமாக வந்தது குறித்து மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
from விகடன்
umn news
