
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என முயற்சி செய்யும் அன்பு (விக்னேஷ் ரவி),
அதற்கு உதவியாக வேலைக்குச் சென்றுகொண்டே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் மனைவி அனு (சரண்யா ரவிச்சந்திரன்) -
இவர்கள் இருவர் வாழ்வின் கல்யாணத்துக்கு முன், பின் என இரு காலகட்டங்களைச் சொல்ல முயல்வதே ‘க.மு.க.பி’ படத்தின் கதை.
இதில் நாயகன் தயாரிப்பாளரிடம் கதை சொல்லச் செல்கிறார்; அங்கே அவர் கதை சொல்லும் கதை ‘கதைக்குள் கதை, குடைக்குள் மழை’ என இரண்டு புனைவுகளாக விரிகிறது.
இது நிஜத்தையும் கற்பனையும் பிரிக்க முடியாத அளவுக்குச் சிக்கலாக்கி நம்மை பாடாய்படுத்துவது தனிக்கதை.

உரையாடல் வழியாக நகர்கிற கதைக்களத்துக்குப் பக்கபலமாக இருக்க வேண்டிய நடிப்பைச் சுத்தமாகக் கொடுக்காமல் ஏமாற்றமளிக்கிறார் நாயகன் விக்னேஷ்.
சரண்யாவின் பாத்திரமும் பெண்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதில் பாதியில் நிற்கிறது. இதில் டப்பிங்கில் மூச்சு விடும் சத்தத்தைக்கூட நிசப்தமே இல்லாமல் கொடுத்திருக்கிறார் சரண்யா.
கதைக்குள் கதையில் டி.எஸ்.கே கோபப்படுவதாக வருகிற இடத்தில் பாஸ் ஆனாலும், ரொமான்ஸ் மீட்டரில் ஒரு புள்ளி கூட நகராமல் அங்கேயே நிற்கிறது அவரது நடிப்பு.
அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியதர்ஷினிக்கும் இது பொருந்தும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அத்தனைத் தடுமாற்றம்!
தர்ஷன் ரவிக்குமாரின் பின்னணி இசை காட்சிகளை உயர்த்துவதற்குப் பதிலாக, சலிப்பைத் தருகிறது. பாடல்களும் பெரிதாக மனதில் நிற்கவில்லை.
ஜி.எம்.சுந்தரின் ஒளிப்பதிவும், படத்தின் மொத்தத் தரத்தை உயர்த்துவதற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை.

சிவராஜ் பரமேஸ்வரனின் படத்தொகுப்பு, மிக மிகக் குழப்பத்துடன் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்துக் காட்டத் தவறுகிறது. இருப்பினும், படத்தின் திரைநேரத்தைக் குறைத்ததற்கு நன்றி!
ஒலி வடிவமைப்பு, டப்பிங் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் பின்னணி ஒலி, உரையாடல்கள் ஒத்திசைவின்றி ஒலிக்கின்றன.
அதை மிகவும் இயல்பாக இருக்க வேண்டிய திரைமொழியில் பேசாமல், மோசமான ஸ்டேஜிங், செயற்கையான காட்சியமைப்புகளால் கோத்திருக்கிறார்.
இதனால் ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வு வராமல், ஒரு சாதாரண வீடியோவைப் பார்க்கிறோம் என்ற உணர்வே மிஞ்சுகிறது. காதல் காட்சிகளும், அதற்காக வைக்கப்பட்ட வசனங்களும் படு செயற்கைத்தனமாக உள்ளன.
அதேபோல, கதையின் மையமான கல்யாண வாழ்வில் இருக்கும் சிக்கல்களை மூச்சுவிடாமல் பேசும் வசனங்களாக மட்டும் காட்டிவிட்டு, திரைக்கதைக்குச் சம்பந்தமே இல்லாமல் வருகிற நபர்களுக்கும் காட்சிகளை வைத்திருப்பது முரண்!
இதனாலேயே பலவீனமாகப் பின்னப்பட்ட திரைக்கதையில், காட்சிகளுக்கு இடையே தொடர்பு இல்லாமல், கதைக்குச் சம்பந்தமில்லாத பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. இது கதையின் ஓட்டத்தை முற்றிலும் சிதைத்துவிடுகின்றன.
நடிப்பு, திரைக்கதை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் பலவீனமாக உள்ள இந்த ‘க.மு.க.பி’, ஏமாற்றத்தையே கொடுக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
from Movie Review | திரை விமர்சனம்
Umn news
