தீ விபத்தில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த தீயணைப்பு வீரர் மனைவி அங்கயற்கண்ணி, தனது குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: `தீபாவளி நாளில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்கள்; காரணம் யார்..?!’ - கொதிக்கும் மதுரை மக்கள்
கடந்த தீபாவளி திருநாளன்று அதிகாலையில் மதுரை விளக்குத்தூன் அருகிலுள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீப்பிடித்தது. அதை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் எதிர்பாராத விதமாக 4 தீயணைப்பு வீரர்கள் மாட்டிக்கொண்டனர்.
அதில் சிவராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தீயணைப்பு வீரர்கள் பலியானார்கள். தீபாவளி அன்று நடந்த இந்த சம்பவம் மதுரை மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதில் திருப்புவனத்தை சேர்ந்த வீரர் கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை.
செக்கானூரணியை சேர்ந்த வீரர் சிவராஜாவுக்கு 8 வருடங்களுக்கு முன் திருமணமாகி அங்கயற்கண்ணி என்ற மனைவியும் 6, 2 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். சிவராஜாவின் திடீர் மறைவால் அவர் குடும்பம் நிலை குலைந்தது.
அரசாலும், தீயணைப்புத்துறையாலும் நிவாரணத்தொகை வழங்கினாலும், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டாலும், கணவரின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கவலையில் தவித்து வந்தார் அங்கயற்கண்ணி.
செக்காணூரனியில் மாமனார் வீட்டில் வசித்து வந்தவர் யாரிடமும் பேசாமல் தனித்து இருந்திருக்கிறார். அவரின் கவலையை மாற்றும் வகையில் நாகமலை புதுக்கோட்டையிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், இங்கு வந்தும் இயல்பு நிலைக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று உடல் நலமில்லாதாத மூத்த மகனை மருத்துவமனைக்கு, பெற்றோர் அழைத்து சென்ற நிலையில், 2 வயது குழந்தையுடன் வீட்டில் இருந்த அங்கயற்கண்ணி, குழந்தையை தன் பெரியம்மாவிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் சென்றிருக்கிறார்.
நீண்ட நேரமாகியும் அறைக்குள் இருந்து அங்கயற்கண்ணி வெளியே வராததை பார்த்து பதறிய அவர் பெரியம்மா, கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லாததால் அருகிலுள்ள வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அங்கயற்கண்ணி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதனால் அவர் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். கணவரின் திடீர் மறைவு பேரிழப்புதான் என்றாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்க்காமல் விபரீத முடிவை எடுத்துள்ளார் அங்கயற்கண்ணி என உறவினர்கள் சோகத்தில் கண்ணீர் வடிக்கின்றனர்.
அவர் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதுமுள்ளதா என்ற கோணத்திலும் நாகமலை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3hc0WhO
via
