`ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திப்போம்’ என சசிகலா சென்னையில் கூறிய அதே வேளையில் தஞ்சாவூரில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த போது அ.தி.மு.க, அ.ம.மு.க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். அப்போது ஜெயலலிதா படத்துடன் கூடிய அ.ம.மு.க கொடியை அ.தி.மு.க நிர்வாகிகள் தரையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
Also Read: அ.தி.மு.க-வுக்குள் சசிகலா வேண்டாம்! - எடப்பாடியின் பிளான் என்ன..?
தஞ்சாவூர் ரயிலடியில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க, அ.ம.மு.க-வினர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கத் தயாரகினர். இதற்காக சிலை அமைந்துள்ள இடத்தில் அ.தி.மு.க-வினர் ஏற்கனவே தங்கள் கட்சிக் கொடியைக் கட்டியிருந்தனர்.
அத்துடன் அண்ணா சிலையிலிருந்து அ.தி.மு.க நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். இந்நிலையில் முன்னதாகவே சிலை இருக்கும் இடத்துக்கு வந்த அ.ம.மு.க நிர்வாகிகள் தங்கள் கொடியையும் அப்பகுதி முழுவதும் கட்டினர்.
பின்னர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு கீழே இறங்கினர். அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், அ.ம.மு.க கொடியை அகற்றுமாறு, அக்கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் முடியாது என மறுத்ததுடன் போலீஸாரையும் கொடியை அகற்றவிடாமல் தடுத்தனர். இதையடுத்து அ.தி.மு.க கொடியையும் அகற்றினால், நாங்களும் எடுத்துவிடுகிறோம் எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அ.ம.மு.க-வினரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், கொஞ்சம் தூரம் தள்ளி நிற்க வைத்தனர்.
இதற்குள் பேரணியாக அ.தி.மு.க நிர்வாகிகள் சிலையை வந்தடைந்தனர். அப்போது அ.தி.மு.க கொடிகளுக்கு நடுவே அ.ம.மு.க கொடி கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து கொடியை அகற்றுமாறு கூச்சலிட்டனர். அத்துடன் மாலை அணிவிக்க சிலைக்கு மேலே ஏறியவர்கள், அங்கு கட்டப்பட்டிருந்த அ.ம.மு.க கொடியைக் கழற்றி கீழே வீசினர்.
இதனைப் பார்த்த அ.ம.மு.க நிர்வாகிகள் அந்த இடத்தில் திரண்டனர். இதையடுத்து இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. `எங்க கொடியை அகற்றுவதற்கு, நீங்க யார்?’ என அ.ம.மு.க-வினர், அ.தி.மு.க-வினரைப் பார்த்து கேட்டனர் .அப்போது இருதரப்புக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்படது. அவர்களைச் சமாதானப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
தள்ளுமுள்ளுவின்போது தரையில் கிடந்த ஜெயலலிதா படம் போட்ட கொடி சிலரது காலில் மிதிப்பட்டது. அப்போது அங்கிருந்த ஜெயலலிதா விசுவாசிகள் சிலர், `ஜெயலலிதா பிறந்தநாளில் அவரது படத்தையே தரையில் வீசிவிட்டனர். இதுதான் அவருக்கு செய்யும் மரியாதையா?’ என வேதனைப்பட்டுக்கொண்டனர்.
அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சசிகலா விவகாரத்தில் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். இதனால் அவர் சசிகலா தரப்புக்கு ஆதரவாக மாறக்கூடும் என அரசியல் வட்டத்தில் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இதுகுறித்து அவர் எதுவும் பேசாமல் இருந்தார்.
இந்நிலையில், அ.ம.மு.க கொடியை அகற்றச் சொல்லி வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவாக இல்லை என்பதை உணர்த்தும் விதமாகவே வைத்திலிங்கத்தின் அறிவுறுத்தலின்படி அவரது ஆதரவாளர்கள் அ.ம.மு.க கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக இருதரப்பைச் சேர்ந்த சிலர் பேசி கொண்டனர்.
சென்னை தி. நகரில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா, `ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திப்போம்’ என்று கூறியிருந்தார். அதேநேரத்தில் தஞ்சாவூரில் கொடி விவகாரத்தில் இரு தரப்பும் வாக்குவாதம் செய்து மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2ZMY1UZ
via
