`நாராயணசாமியின் ஒன்றேகால் மணிநேர உரை; ஆட்சிக் கவிழ்ப்பு!’ புதுச்சேரி சட்டசபையில் என்ன நடந்தது?

0

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக 2 அமைச்சர்களும், 2 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி எழுந்தது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 14 எம்.எல்.ஏக்களும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் - அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு 14 எம்.எல்.ஏக்களும் என சம பலம் ஏற்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை

அதையடுத்து,``காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு போதிய எம்.எல்.ஏக்களின் பலம் இல்லாததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் அரசு தானாக முன்வந்து பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமியும் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த அரசும் பதவி விலக வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மேலும், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் மனுவும் அளித்தனர். அதன்பேரில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன், பிப்ரவரி 22-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், அன்றய தினம் மாலை 5 மணிக்குள் அதற்கான வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி

இதற்கிடையில் நேற்று ( பிப்ரவரி 21-ம் தேதி) காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணனும், தி.மு.க எம்.எல்.ஏ வெங்கடேசனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கட்சியின் பலம் 12 ஆகக் குறைந்தது.

தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 14 பேரும் அவைக்கு வந்தனர். அதேபோல முதல்வர் நாராயணாசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் வருகை தந்தனர். அப்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.

சட்டபேரவையில் உரையாற்றும் நாராயணசாமி

அதையடுத்து சரியாக ஒன்றேகால் மணி நேரம் வக்கெடுப்பின் மீது உரையாற்றினார் நாராயணசமி. அப்போது, ``நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பதால் தொடர்ச்சியாக ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபடுகிறது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் முழுமையாக எங்கள் ஆட்சியை நிறைவு செய்திருக்கிறோம். ஆட்சி முடிய 10 நாள்களே உள்ள நிலையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை இப்படிக் கவிழ்ப்பது ஜனநாயகப் படுகொலை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் இப்படி செய்வது அரசியல் விபசாரம். எந்தப் பதவியும் நிரந்தரமானது அல்ல. அனைவருக்கும் நிரந்தரமான ஒரே பதவி சிவலோகப் பதவி மட்டும்தான்” என்றார்.

மேலும், ``பச்சோந்திகளாக இருக்காதீர்கள்” என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் கடுமையாக தாக்கிப் பேசிவிட்டு வெளிநடப்பு செய்தார். அவருடன் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் வெளியேறினர்.

எதிர்க்கட்சிகள் செய்தியாளர் சந்திப்பு

அதையடுத்து பேரவையில் பெரும்பான்மையை ஆளும் அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதாக அறிவித்தார் சபாநாயகர் சிவக்கொழுந்து. தொடர்ந்து துணை நிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார் நாராயணசாமி. இதன்மூலம் புதுச்சேரியில் நான்கரை வருடங்களாக நீடித்துவந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, முடிவுக்கு வந்தது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/37BpNIF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*