புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தெலங்கானாவின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக அந்தப் பொறுப்பைக் கவனிப்பார் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பை நேற்று முதல் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதேபோல வைசியாள் வீதியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் நேற்று இரவு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
அதில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக 2016-ம் ஆண்டு பொறுப்பேற்ற கிரண் பேடி 6 மாதங்கள்தான் அவருக்கான விதிமுறைப்படி செயல்பட்டார். அதன்பிறகு புதுச்சேரி மக்களுக்கு மதிக்காமல், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தார்.
நானும் அமைச்சர்களும் அதை பலமுறை சுட்டிக்காட்டியும் உதாசீனப்படுத்தினார் கிரண் பேடி. மக்களின் அதிகாரத்தை, அவர்களின் வாக்குறுதியைப் பறிக்கும் விதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
அவரின் செயலை மத்தியில் உள்ள நரேந்திரமோடி அரசும் ஊக்குவித்து வந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளாக புதுச்சேரி ராஜ்நிவாஸ் பா.ஜ.க தலைமை அலுவலகம் போலத்தான் செயல்பட்டு வந்தது. பா.ஜ.க சொல்வதை, சொன்னதைத்தான் அவர் செயல்படுத்தி வந்தார். மக்கள் நலத்திட்டங்கள அனைத்தையும் நிறைவேற்ற முடியாமல் தடுத்து நிறுத்தினார். அந்தத் திட்டங்களுக்காக அனுமதி கேட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பும் கோப்புகள் அனைத்தையும் திருப்பி அனுப்பினார்.
Also Read: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவி: கிரண் பேடி நீக்கம், தமிழிசைக்குக் கூடுதல் பொறுப்பு
அவரின் செயல்பாடுகளைக் கண்டித்து எங்களது மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் பல போராட்டங்களை முன்னெடுத்தோம். அதன் விளைவாக, எங்களின் கோரிக்கை நியாயமானது என்பதை உணர்ந்து நரேந்திரமோடி அரசு, கிரண் பேடியை இங்கிருந்து தூக்கி எரிந்திருக்கிறது. இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி. பலகட்டப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி.
Also Read: புதுச்சேரி: `நாராயணசாமி Vs கிரண் பேடி; வாருங்கள்... வராதீர்கள்!’ - குழப்பும் `புத்தாண்டு அரசியல்’
புதுச்சேரி மக்களின் உரிமைகளைப் பறிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்” என்றவர், ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரண் பேடி பா.ஜ.க சார்பில் புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளாராக நிறுத்தப்படுவார் என்ற தகவல் பரவுகிறதே? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ``அப்படி நிறுத்தினால் வரவேற்கிறோம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2LYlhMH
via
