மாநிலங்களவை எம்.பி.முகமது ஜான் ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவந்தார். நேற்று முன்தினம் மாலை பிரசாரத்துக்குக் கிளம்பிய அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். முகமது ஜானின் மறைவு அ.தி.மு.க-வினரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அந்தத் துயரத்திலிருந்து தொண்டர்கள் இன்னும் மீளவில்லை.
அஞ்சலிக்குப் பின் ராணிப்பேட்டை ஈத்கா மைதானத்துக்கு உடல் ஊர்வலமாகத் தூக்கிச்செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பஜார் பகுதியிலுள்ள மசூதிக்குக் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. முகமது ஜான் மறைவு அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரை நிலைகுலையச் செய்திருக்கிறது.
`உயிர் பிரிவதற்கு முன்பு வரை எனக்காக வாக்குச் சேகரித்தார்’ என்று கூறி முகமது ஜான் உடல் முன் கதறி அழுதார் வேட்பாளர் சுகுமார். முகமது ஜானின் உடலை வேட்பாளர் சுகுமார் தோளில் சுமந்து சென்றார். சுகுமாரின் இந்தச் செயல், முகமது ஜானின் உறவினர், சமூகத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை தொகுதியில் இஸ்லாமியர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள். எம்.பி முகமது ஜான் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இருப்பதாலும் அவருக்கு இஸ்லாமியர்களின் ஆதரவு கிடைத்தது. அவரது மறைவு இஸ்லாமியர்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. `ராணிப்பேட்டை தொகுதியை வென்றெடுத்து, எம்.பி முகமது ஜான் கல்லறையில் அந்த வெற்றியைச் சமர்ப்பிப்போம்’ என்று கல்லறை முன் வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் அ.தி.மு.க-வினர் சபதம் ஏற்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lOxd0U
via
