'காவிரிய வச்சுக்கோ... அம்மா குடு...' என்ற வரிகளால் போஸ்டர் ஒட்டி ஜெயலலிதாவின் கவனம் ஈர்த்தவர் மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ்.
அதிமுக இளைஞரணி மாநில இணைச்செயலாளரும், செல்லூர் ராஜூவின் தீவிர விசுவாசியுமான கிரம்மர் சுரேஷ் தற்போதைய தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்குவது மதுரை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கான நபராக வலம் வருகிறவர் கிரம்மர் சுரேஷ். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டுவதன் மூலம் அனைவரையும் ஈர்த்தவர். அதிலும் குறிப்பாக செல்லூர் ராஜூவின் தீவிர விசுவாசியாக செயல்பட்டவர். செல்லூர் ராஜூவின் பிறந்த நாள், திருமண நாள், அவர் தாயார் நினைவு நாளுக்கு பல லட்ச ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை செய்வார். நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களை செய்வார்.
செல்லூர் ராஜூவும் ஒவ்வொரு நிகழ்சியிலும் கிரம்மர் சுரேஷ் என் மகன் போன்றவர் என்று நெக்குருகுவார். அதே நேரம் தேர்தல் காலங்களில் கிரம்மர் சுரேஷை பரிந்துரை செய்யாமல் புறக்கணிக்கிறார் என்று புகாரும் இருந்து வந்தது.
தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்தியத் தொகுதி அல்லது வடக்குத் தொகுதியை கேட்டிருந்தார் கிரம்மர் சுரேஷ். ஆனால், இப்போதும் செல்லூர் ராஜூ பரிந்துரை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
வடக்குத் தொகுதியை பாஜகவுக்கும், மத்திய தொகுதியை பசும்பொன் தேசிய கழகத்துக்கும் அதிமுக ஒதுக்கியது.
மத்திய தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ பிடிஆர் தியாகராஜனை எதிர்க்க வலுவான நபரை நிறுத்தவில்லை என்று அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில் கட்சிக்கு தன் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மத்தியத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட இன்று மனு தாக்கல் செய்துள்ளார் கிரம்மர் சுரேஷ். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய பெரும் திரளாக ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய கிரம்மர் சுரேஷ், " பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறைந்த பின் அவர் குடும்பத்துக்கு வாய்ப்பு வழங்காமல் திமுக புறக்கணித்ததால், அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தேன். அதிமுகவில் எந்த ஒரு செயலையும் பிரதிபலன் பார்க்காமல் செய்தேன். இதுவரை கட்சியை வைத்து நான் பலனடைந்தது இல்லை. என் மதுரை மக்களுக்கு நான் செய்யும் உதவிகள் அனைவருக்கும் தெரியும். அதைத்தான் என் தகுதியாக நினைத்து வருகிறேன்.
கட்சியின் ஆதரவாளனாக எப்போதும் செயல்பட்டு வருகிறேன். ஆனால், கட்சித் தலைமையின் ஆதரவாளராகி சீட் பெறுவதற்கு என்ன தகுதி வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.
மத்திய தொகுதிக்கு அப்குதியிலுள்ள ஒரு கட்சிக்காரனை தேர்வு செய்யாமல் சம்பந்தமே இல்லாமல் ஒரு நபரை அறிவித்ததால் மக்கள் கோபமாகி உள்ளனர். நானும் சீட் கேட்டேன். எனக்கு ஏன் வழங்கவில்லை என்பது தெரியவில்லை. அதனால் மக்களின் விருப்பத்தின்படி நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cJawXS
via
