சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து பிந்து அம்மிணி, கனக துர்க்கா ஆகிய பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தது பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து உடனே நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜையும் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் தாக்கம், கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது. கேரளத்தில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. அதில் 10 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றது.
இந்த நிலையில் சபரிமலை விவகாரம் வரும் ஏப்ரல் 6-ம் தேதி, நடக்க இருக்கும் கேரள சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள களக்கூட்டம் தொகுதியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் வீடுவீடாக வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்ட கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சபரிமலையில் நடந்த சம்பவங்களில் தனக்கு வருத்தம் உண்டு எனக்கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், "சபரிமலையில் 2018-ல் நடந்த சம்பவம் கேரளத்தை பொறுத்தவரை முடிந்துபோன விஷயம். அதன்பிறகு நிறைய திருவிழாக்கள் அங்கு நடந்தன. 2018-க்கு முன்பு நடந்ததை விட சிறப்பானதாக அந்த விழாக்கள் நடந்ததாக வழக்கமாக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கூறினார்கள். சபரிமலையில் அதிகமான விழாக்களில் நான் பங்கெடுத்திருக்கிறேன். 2018-ல் நடந்த சம்பவம் நம்மை வேதனைப்படுத்திய, வருத்தப்படுத்திய சம்பவம். அது ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத சம்பவம்.
சபரிமலை விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு இப்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அந்த பெஞ்சின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், கேரளத்தின் பக்தர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் கருத்தைக் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும்" என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், "கடகம்பள்ளி சுரேந்திரன் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும். மனிதி அமைப்பையும், ரஹானா பாத்திமாவையும் பதினெட்டாம் படியில் ஏற்ற முயன்றதற்கு வெளிப்படையாக பொறுப்பு ஏற்க, கடகம்பள்ளி சுரேந்திரன் முன்வரவேண்டும். அவர் தேவசம்போர்டு அமைச்சர் ஆனபிறகுதான் கோயில்களை சீர்குலைக்கும் திட்டமிடல்கள் நடந்தன. கடகம்பள்ளி சுரேந்திரனின் மோசமான செயல்பாட்டால் கோயில்கள் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடகம்பள்ளி சுரேந்திரனின் போலித்தனமான அழுகையை கேரள பொதுமக்கள் நம்பமாட்டார்கள்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3rBFBTu
via
