திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் மற்றும் நைவேத்தியம் பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமென்று வெளியான அறிவிப்பால் சர்ச்சை எழுந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து `அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்’ உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தது.
வழக்கு தாக்கல் செய்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் பேசியதாவது, "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தில் பயிற்சி முடித்து, 14 வருடங்களாக 203 பிராமணரல்லாத மாணவர்களான எங்களுக்கு அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்காமல் இருக்கிறது. எங்கள் பணி நியமனத்திற்காக போராடுவது மட்டுமல்லாமல், திருக்கோயில் பணி நியமனங்களில் பிராமணரல்லாதோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறோம்.
அந்த வகையில்தான் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் (பரிச்சாகரர்) மற்றும் நைவேத்தியம் ஆகிய பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு ஜனவரி 12-ம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது
இது பெரும் அநீதி என்பதால் இவ்வறிப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம். மார்ச் 4-ம் தேதி வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
எங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை ஆஜரானார். திருக்கோயில் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே இதே போல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பிராமணர்கள் மட்டும் தான் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என வெளியிட்ட அறிவிப்பாணைகளை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு இடைக்கால உத்தரவுகளை பெற்றோம். எங்கள் வழக்குகள் காரணமாக அவை திரும்பப் பெறப்பட்டன.
கோயில் நிர்வாக அதிகாரிகள் இதுபோன்ற சட்டவிரோத பணிநியமன அறிவிப்பாணைகளை வெளியிடுவதும், நாங்கள் வழக்கு தாக்கல் செய்தவுடன் திரும்ப பெறுவதுமாக உள்ளார்கள்.
தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் அரசியல் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக கோயில் பணியிடங்களில், பிராமணர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என சாதி அடிப்படையில் பணி நியமிக்கப்படுவதை தடுத்திட வேண்டும்.
Also Read: திருச்சி கிழக்கு: தொகுதி மாறும் அன்பில் மகேஷ்?; போட்டிக்கு இனிகோ இருதயராஜ்! -தீராத திமுக பஞ்சாயத்து
மேலும், சட்ட விரோத அறிவிப்பாணைகள் வெளியிடும் அறநிலையத்துறை அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்.
இது போன்ற ஒவ்வொரு அறிவிப்புகளும், மக்களின் மீது சாதிய இழிவை நிலைநிறுத்தும் செயல் என்பதால் இதை அரசு தடுத்திட வேண்டும். அர்ச்சகர் உள்ளிட்ட திருக்கோயில்களின் அனைத்து நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cq9K1D
via
