''தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன!'' 'மஞ்சனத்தி'யாக மாறிய 'பண்டாரத்தி'

0

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' திரைப்படம் உருவாகி வருகிறது. வரும் ஏப்ரல் 9-ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்குமுன், இந்தப் படத்திலிருந்து மூன்று பாடல்களை வெளியிட்டது படக்குழு. அதில் ஒரு பாடலுக்கு 'பண்டாரத்தி புராணம்' என பெயர் வைத்திருந்தனர். அந்தப் பாடலை யுகபாரதி எழுதி, தேவா பாடியிருக்கிறார். அந்தப் பாடலிலும் 'பண்டாரத்தி' என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும்.

'ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்வதுபோல் இந்த வரி அமைந்திருக்கிறது. எனவே, இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என மதுரையைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர், வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம், அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

கர்ணன்

"அனைவருக்கும் அன்பின் வணக்கம். 'கர்ணன்' திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும், மரியாதையும் தான் சினிமா எனும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் 'பண்டாரத்தி புராணம்' பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி 'பண்டாரத்தி'யை 'மஞ்சனத்தி' என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன ... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான், கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்... காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.



from தமிழ் சினிமா https://ift.tt/3ckoSiv
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*